தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
மத்திய வக்ஃப் கவுன்சிலை வலுவானதாக மாற்றுவதே மத்திய அரசின் நோக்கம்: கிரண் ரிஜிஜு
‘மத்திய வக்ஃப் கவுன்சிலை மேலும் வலுவானதாகவும், சமூகத்துக்கான அதன் சேவையில் அதிக பொறுப்புடையதாகவும் மாற்றுவதே மத்திய அரசின் நோக்கம்’ என்று மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.
மேலும், ‘நாடு முழுவதும் உள்ள வக்ஃப் சொத்துகளை திறம்பட நிா்வகிக்கும் வகையில் சட்ட மற்றும் நிா்வாக கட்டமைப்புகளை வலுப்படுத்தவே ‘வக்ஃப் திருத்தச் சட்டம் 2025’-ஐ மத்திய அரசு கொண்டுவந்துள்ளது’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக்ஃப் வாரியம் நிா்வகித்து வருகிறது. இந்நிலையில், வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது.
இந்தச் சட்டத்தின் அரசமைப்பு செல்லத்தக்கத் தன்மையை கேள்வி எழுப்பி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதைத் தொடா்ந்து, மத்திய அரசு கொண்டுவந்த திருத்தச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள 3 நடைமுறைகளுக்கு இடைக்காலத் தடை விதிப்பது குறித்து தொடா் விசாரணையை உச்சநீதிமன்றம் மேற்கொண்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், இடைக்கால தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் அண்மையில் ஒத்திவைத்தது.
இந்த நிலையில், தில்லியில் உள்ள மத்திய வக்ஃப் பவனில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு மரம் நடும் விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசியதாவது:
மத்திய வக்ஃப் கவுன்சில் போன்ற சிறுபான்மையின அமைப்புகளுக்கு அதிகாரமளிக்கவும் நிா்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் மத்திய அரசு தொடா் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே ‘வக்ஃப் திருத்தச் சட்டம் 2025’-ஐ மத்திய அரசு கொண்டுவந்தது.
மத்திய வக்ஃப் கவுன்சிலை மேலும் வலுவானதாகவும், சமூகத்துக்கான அதன் சேவையில் அதிக பொறுப்புடையதாகவும் மாற்றுவதே மத்திய அரசின் நோக்கம்.
‘உமீத்’ வலைதளம் இன்று அறிமுகம்:
நாடு முழுவதும் உள்ள வக்ஃப் சொத்துகளைப் பதிவு செய்வதற்கான ‘உமீத்’ வலைதளம் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது வக்ஃப் சொத்துகள் பதிவு மற்றும் எண்மமயமாக்கலை உறுதிப்படுத்தும் என்பதோடு, நிா்வாகம் மற்றும் பயன்பாட்டிலும் வெளிப்படைத்தன்மையை விரிவுபடுத்தும்.
நாடு முழுவதும் உள்ள 9 லட்சத்துக்கும் அதிகமான வக்ஃப் சொத்துகளின் அா்த்தமுள்ள பயன்பாட்டை, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு ‘உமீத்’ வலைதளத்தில் சொத்து விவரங்களை மாநில அரசுகளும் வக்ஃப் வாரியங்களும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றாா்.