தீபாவளி: காளி பூஜை, எமனுக்கு விளக்கு, முன்னோர் வழிபாடு; இந்தியா முழுவதும் வேறுபட...
முருங்கை முதல் சிவப்பரிசி வரை; மழைக்கேற்ற 4 ஹெல்தி சூப்!
விறுவிறு சுவை, தொண்டைக்கு இதம், வயிற்றுக்குப் பதம் என்று பல்வேறு அற்புதமான குணநலன்களுடன், அடுத்து சாப்பிடும் உணவுக்கும் நாவையும், வயிற்றையும் தயார்படுத்துவது சூப்!
மழை, குளிர்காலங்களில் `சூப் ரெடி!’ என்று அறிவித்தால் போதும்... வீட்டில் இருப்பவர்கள் டி.வி-யையும், கம்ப்யூட்டரையும், ஸ்மார்ட் போனையும் ஒரு கணம் மறந்துவிட்டு, ‘சீக்கிரம் கொண்டு வா! என்று சாப்பிடும் இடத்தில் ஆஜராகிவிடுவார்கள். வித்தியாசமான 4 சூப் வகைகளை இங்கே செய்துகாட்டியிருக்கிறார் சமையல்கலை நிபுணர் ர. கிருஷ்ணவேணி.
பேபிகார்ன் - மஞ்சள்பூசணி சூப்
தேவையானவை: பேபிகார்ன் - 5, பாதாம் - 10, துருவிய மஞ்சள்பூசணி - கால் கப், பால் - 2 கப், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப.
செய்முறை: பாதாமை வெந்நீரில் ஊறவைத்து, தோலுரிக்கவும். இதனுடன் சிறிதளவு பால் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வெண்ணெயை சூடாக்கி, பொடியாக நறுக்கிய பேபிகார்ன், துருவிய மஞ்சள் பூசணி சேர்த்து வதக்கவும்.
இதனுடன் கொஞ்சம் பால் சேர்த்து, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் அரைத்த பாதாம் விழுது, பேபிகார்ன் கலவை, மீதமுள்ள பால் சேர்த்துக் கொதிக்கவிடவும். எல்லாம் சேர்ந்து கொதிக்கும்போது உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இறக்கி, சூடாகப் பரிமாறவும்.
உடல்நலம் பாதிக்கப்பட்டு குணமாகி வருபவர்களுக்கு, இந்த சூப் கொடுத்தால், குணமடைவதை துரிதப்படுத்தும்.
சீரகம் - தனியா சூப்

தேவையானவை: சீரகம், மல்லி (தனியா) - தலா கால் கப், இஞ்சி - சிறிய துண்டு, மிளகு - 2 டீஸ்பூன், எலுமிச்சைப் பழம் - 2, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மல்லி (தனியா), சீரகம், மிளகு ஆகியவற்றை ஒன்றாக ஊறவைக்கவும். இத்துடன், கறிவேப்பிலை, தோல் சீவிய இஞ்சி சேர்த்து விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கலந்து, சக்கையை வடிகட்டி எடுத்துவிடவும். பிறகு, தேவையான உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, கொதித்ததும் இறக்கவும். எலுமிச்சைச் சாறு சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
இந்த `க்ளியர் சூப்’, பசியைத் தூண்டும்; உணவு நன்கு செரிமானம் ஆக உதவும். இது கெட்டியாக இருக்காது. கெட்டியாக தேவைப்பட்டால், கார்ன்ஃப்ளார் சேர்த்துத் தயாரிக்கலாம்.
முருங்கை சூப்

தேவையானவை: முருங்கைக்கீரை - ஒரு கப், முருங்கைப்பூ - கால் கப், முருங்கைக்காய் - 4, உளுத்தம்பருப்பு - கால் கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப.
செய்முறை: உளுந்தை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து கொரகொரப்பாக பொடிக்கவும். முருங்கைக்காயை பெரிதாக நறுக்கி, வேகவைக்கவும். ஆறியதும் ஸ்பூனால் உள்ளிருக்கும் சதையை எடுத்துக்கொள்ளவும்.
முருங்கைக்கீரையை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பிரஷர் பேன் (Pan) அல்லது சின்ன குக்கரில் வெண்ணெய் சேர்த்து, சீரகத்தூளையும் சேர்க்கவும்.
முருங்கைப்பூ, முருங்கைக்கீரை சேர்த்து வதக்கவும். இதனுடன் முருங்கைக்காய் விழுது, பொடித்த உளுந்து, மஞ்சள்தூள், உப்பு, மிளகுத்தூள், 2 கப் தண்ணீர் சேர்த்து மூடவும். ஒரு விசில் வரும்வரை வேகவைக்கவும். பிறகு திறந்து, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்து, சூடாகப் பரிமாறவும்.
இது, கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்த சூப்.
சிவப்பு அரிசி சூப்

தேவையானவை: சிவப்பு அரிசி - அரை கப், உளுந்து - கால் கப், முட்டைகோஸ், பாலக்கீரை, புரோக்கோலி - தலா ஒரு கப், புதினா இலைகள் - சிறிதளவு, உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப.
செய்முறை: சிவப்பரிசி, உளுந்தை வாசனை வரும் வரை வறுத்து, ரவை போல உடைக்கவும். இந்த ரவை, பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், பாலக்கீரை, புரோக்கோலி, 2 கப் தண்ணீர், உப்பு, மிளகுத்தூள் எல்லாவற்றையும் பிரஷர் பேன் (pan) அல்லது சின்ன குக்கரில் சேர்த்து மூடி, ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும். ஆறியதும் நன்கு கலந்து, புதினா இலைகளால் அலங்கரித்துப் பரிமாறவும்.
அல்சர் இருப்பவர்களுக்கு இந்த சூப் மிகவும் நல்லது.