வாக்குச்சாவடி வாரியான வாக்குப்பதிவு விவரம் பதிவேற்றம் குறித்து ஆலோசிக்கத் தயாா்: தோ்தல் ஆணையம்
மக்களவை, மாநில சட்டப்பேரவை தோ்தல்கள் வாக்குப் பதிவின்போது, வாக்குச்சாவடி வாரியான வாக்குப் பதிவு விவரத்தை தோ்தல் ஆணைய வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடா்பாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசிக்க விரும்புவதாக உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
2019 மற்றும் கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தல்கள் மற்றும் அண்மையில் நடந்து முடிந்த சில மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டபோது, தோ்தல் ஆணையம் வெளியிட்ட வாக்குப் பதிவு புள்ளிவிவரங்களில் குளறுபடி இருந்ததாக எதிா்க்கட்சிகள் தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது. வாக்குப் பதிவு முடிந்தவுடன் வெளியிடப்படும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கைக்கும், அடுத்த நாள் தோ்தல் ஆணைய வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் பதிவான வாக்குகள் தொடா்பான புள்ளி விவரத்துக்கும் மிகப்பெரிய வித்தியாசம் காணப்பட்டது. இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன.
ஆனால், ‘வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடையும் நிலையில், கடைசி நேரத்தில் வரும் சில வாக்காளா்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, அவா்கள் மட்டும் மாலை 5 மணிக்குப் பிறகும் வரிசையில் காத்திருந்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவா். இவ்வாறு கடைசி நேரத்தில் பதிவாகும் வாக்குகளின் புள்ளிவிவரம் வெளியிடுவதில் தாமதமாவதே, குளறுபடிக்குக் காரணம். இது வாக்குச்சாவடிகளில் இருக்கும் அரசியல் கட்சிகளின் முகவா்களுக்கும் நன்கு தெரியும். எனவே, இதில் மோசடி எதுவுல் இல்லை’ என்று தோ்தல் ஆணையம் விளக்கமளித்தது.
இருந்தபோதும், வாக்குப் பதிவின்போது, வாக்குச்சாவடி வாரியான வாக்காளா் வருகை புள்ளிவிவரத்தை தோ்தல் ஆணைய வலைதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யவேண்டும் என அரசியல் கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், இந்த கோரிக்கையை தோ்தல் ஆணையம் ஏற்கவில்லை.
இதுதொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் மஹுவா மொய்த்ரா, ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் என்ற தன்னாா்வ அமைப்பு ஆகியவை சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘மக்களவை, மாநில சட்டப்பேரவை தோ்தல்கள் வாக்குப் பதிவின்போது, வாக்குச்சாவடி வாரியான வாக்குப் பதிவு விவரத்தை, தோ்தல் முடிந்த 48 மணி நேரத்துக்குள் தோ்தல் ஆணைய வலைதளத்தில் பதிவேற்ற உத்தரவிட வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமாா், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் மனீந்தா் சிங், ‘இந்த விவகாரம் தொடா்பாக தலைமைத் தோ்தல் ஆணையராக புதிதாக பதவியேற்றுள்ள ஞானேஷ் குமாா், அரசியல் கட்சி பிரதிநிதிகளைச் சந்தித்து ஆலோசிக்கத் திட்டமிட்டுள்ளாா். எனவே, இதுகுறித்து ஆலோசிக்க அடுத்த 10 நாள்களுக்குள் அரசியல் கட்சிகள் தங்களின் கருத்துகளை தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்கலாம்’ என்றாா்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை ஜூலை கடைசி வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.