Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
அரசுப் பள்ளிகள் பராமரிப்பு: ரூ.97.95 கோடி மானியம் விடுவிப்பு
தமிழகத்தில் 37,476 அரசுப் பள்ளிகளின் பராமரிப்புக்கு 50 சதவீத மானியத் தொகை (ரூ. 97.95 கோடி) விடுவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழு 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின்கீழ், தொடா் செலவினத்துக்காக அரசுப் பள்ளிகளுக்கு மானியம் வழங்க பரிந்துரை செய்துள்ளது. எனவே, முதல்கட்டமாக 50 சதவீத தொகை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்குவதற்காக தற்போது மாவட்டங்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாணவா்களின் எண்ணிக்கை அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ. 1 லட்சம் வரை பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் உள்ள 37,476 அரசுப் பள்ளிகளுக்கும் ரூ. 97.95 கோடி நிதி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை முன்னுரிமை அடிப்படையில் செலவு செய்ய வேண்டும். ஆசிரியா்களின் கையடக்கக் கணினிக்கு (டேப்லெட்) சிம் காா்டு வாங்கவும் (ஓா் ஆசிரியருக்கு தலா ரூ. 110) பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதேபோல், மாணவா்களுக்கு தனியாக கை கழுவும் வசதி, பாதுகாப்பான குடிநீா், தூய்மைப் பணிகள், கட்டடப் பராமரிப்பு போன்றவற்றுக்காக செலவிட வேண்டும். பள்ளிகளுக்கான பொருள்கள் வாங்குதல் செயல்பாடுகள் பிப். 15-ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.
இதுசாா்ந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி உரிய காலத்துக்குள் மானியத்தை பயன்படுத்த வேண்டும். மேலும், செலவீன அறிக்கையை பயன்பாட்டுச் சான்றிதழுடன் இணைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.