இந்தியாவுக்கு 6 தங்கம்! தைவான் தடகளப் போட்டிகளில் ஆதிக்கம்!
இந்திய வீரர், வீராங்கனைகளின் ஆதிக்கத்தால் தைபேயில் இன்று(ஜூன் 7) தொடங்கிய ’தைவான் தடகளப் போட்டிகள் 2025-இல்’ இந்தியா இதுவரை, அதாவது இன்று ஒரே நாளில் 6 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
தைவான் தடகளப் போட்டிகளில் ஒலிம்பிக் நாயகி ஜோதி யாராஜி பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்று அசத்தினார். அவர் பந்தய தூரத்தை 12.99 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார்.
தொடக்கத்தில் சற்றே பின்தங்கிய அவர், இரண்டாமிடத்தில் ஓடிக் கொண்டிருந்தபோதிலும் கடைசி 20 மீட்டர் தூரத்தை மின்னல் வேகத்தில் கடந்து முதலிடம் பிடித்து அசத்தினார்.
ஜப்பானின் சசூகா டெரடா(13.04 விநாடிகள்), கிசாடோ கியோயாமா(13.10 விநாடிகள்) முறையே இரண்டு மற்றும் மூன்றாமிடங்களைப் பிடித்தனர்.
பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பூஜா வரலாற்று சாதனையாக பந்தய தூரத்தை 4:11.65 நிமிட நேரத்தில் கடந்து இந்தியாவின் தங்க வேட்டையை இன்று காலை ஆரம்பித்து வைத்தார்.
பெண்களுக்கன 100 மீட்டர் ரிலே தொடர் ஓட்டத்தில் இந்தியாவின் சுதீக்ஷா வத்லூரி, அபிநயா ராஜராஜன், சிநேகா எஸ் எஸ், நித்யா காந்தே ஆகியோர் இணைந்த அணி தங்கம் வென்றது.
ஆடவருக்கான 100 மீட்டர் ரிலே தொடர் ஓட்டத்தில் குரீந்தர்வீர் சிங், அனிமேஷ் குஜுர், மணிகண்டா ஹாப்லிதார், ஆம்லான் போர்கோஹெய்ன் ஆகியோர் இணைந்த அணி தங்கம் வென்றது.
ஆடவருக்கான மும்முறை தாண்டுதலில் முன்னாள் ஆசிய சாம்பியன் அப்துல்லா அபூபக்கர் தங்கம் வென்றார்.
ஆடவருக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தேஜஸ் ஷிர்சே தங்கம் வென்றார்.