மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை...
அகில இந்திய கூடைப்பந்து: இந்தியன் வங்கி, கேரள மின்வாரியம் சாம்பியன்
நாச்சிமுத்து கோப்பைக்கான 58-ஆவது ஆடவர் கூடைப்பந்து போட்டியில் இந்தியன் வங்கி அணியும், சிஆர்ஐ கோப்பைக்கான 22-ஆவது மகளிர் கூடைப்பந்து போட்டியில் கேரள மின்வாரிய அணியும் சாம்பியன் பட்டம் வென்றன.
கோவை வஉசி பூங்கா மாநகராட்சி உள்விளையாட்டு அரங்கில் கடந்த சில நாள்களாக நடைபெற்ற இந்த அகில இந்திய கூடைப்பந்துப் போட்டியில் ஆடவர், மகளிர் பிரிவுகளில் தலா 8 அணிகள் பங்கேற்றன.
லீக் சுற்று முடிவில் ஆடவர் பிரிவில் இந்திய விமானப்படை - இந்தியன் வங்கி அணிகளும், மகளிர் பிரிவில் கேரள மின்வாரியம் - தென்மேற்கு ரயில்வே அணிகளும் இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றன.
கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை, இறுதி ஆட்டத்தில் ஆடவர் பிரிவில் இந்தியன் வங்கி 79-67 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய விமானப்படை அணியை வீழ்த்த, மகளிர் பிரிவில் கேரள மின்வாரிய அணி 91-51 என்ற புள்ளிகள் கணக்கில் தென்மேற்கு ரயில்வே அணியை சாய்த்தது.
முன்னதாக ஆடவர் பிரிவில் மூன்றாமிடத்துக்கான ஆட்டத்தில் இந்திய கடற்படை - சென்னை வருமான வரித்துறையை வீழ்த்தியது (73 - 56). மகளிர் பிரிவில், சென்னை வருமான வரித்துறை - தென் மத்திய ரயில்வேயை வென்றது (72 - 57).
ஆடவர் பிரிவு சாம்பியன் இந்தியன் வங்கி அணிக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசுடன் நாச்சிமுத்து சுழற்கோப்பையும், 2-ஆம் இடம் பிடித்த விமானப்படை அணிக்கு ரூ.50 ஆயிரம் பரிசுடன் என்.மகாலிங்கம் கோப்பையும் வழங்கப்பட்டன. 3-ஆம் இடம் பிடித்த கடற்படை அணிக்கு ரூ.20 ஆயிரம், 4-ஆம் இடம் பிடித்த வருமான வரித்துறை அணிக்கு ரூ.15 ஆயிரம் பரிசளிக்கப்பட்டது.
மகளிர் பிரிவில் முதலிடம் பிடித்த கேரள மின்வாரிய அணிக்கு சிஆர்ஐ பம்ப்ஸ் கோப்பையுடன் ரூ.75 ஆயிரமும், 2-ஆம் இடம் பிடித்த தென்மேற்கு ரயில்வே அணிக்கு ரூ.50 ஆயிரமும், 3-ஆம் இடம் பிடித்த வருமான வரித்துறை அணிக்கு ரூ.20 ஆயிரமும், நான்காமிடம் பிடித்த தென்மத்திய ரயில்வே அணிக்கு ரூ.15 ஆயிரமும் பரிசு வழங்கப்பட்டது.
தொடரில் சிறப்பாக விளையாடிய இந்தியன் வங்கி வீரர் பிரணவ் பிரின்ஸ், கேரள மின்வாரிய வீராங்கனை ஸ்ரீகலா ஆகியோருக்கு சிறந்த வீரர்/வீராங்கனை விருது வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் சக்தி குழுமங்களின் தலைவர் எம்.மாணிக்கம் கலந்துகொண்டு பரிசளித்துப் பாராட்டினார்.
நிகழ்ச்சியில், கூடைப்பந்து கழகத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.