IPL 2025 Finals : 'இறுதிப்போட்டியில் மழை பெய்தால் என்ன நடக்கும்? - விதிகள் என்ன சொல்கிறது?
'இறுதிப்போட்டி...'
ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியும் பஞ்சாப் அணியும் இன்று அஹமதாபாத் மைதானத்தில் மோதவிருக்கின்றன. ஆனால், அஹமதாபாத்தில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக கணிப்புகள் வெளியாகியிருக்கிறது.

'மழை வாய்ப்பு...'
கடந்த ஞாயிற்றுக்கிழமை இதே மைதானத்தில் நடந்த குவாலிபையர் 2 போட்டியிலும் மழை குறுக்கிட்டு போட்டி தாமதமாக தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இறுதிப்போட்டியில் மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்? ஓவர்கள் எப்படி குறைக்கப்படும்? ரிசர்வ் டே உண்டா?
'மழை பெய்தால்...'
இந்த இறுதிப்போட்டியை பொறுத்தவரைக்கும் போட்டி நேரத்தோடு கூடுதலாக இரண்டு மணி நேரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேமாதிரி, போட்டி மழையால் பாதிக்கப்படும்பட்சத்தில் இன்னிங்ஸ் ப்ரேக் இடைவேளையையும் குறைத்து விடுவார்கள். 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு போட்டி 7:30 மணிக்கு தொடங்க வேண்டும் இல்லையா? மழையால் பாதிக்கப்படும்பட்சத்தில் 9:45 மணி வரைக்குமே ஓவர்களை குறைக்கவே மாட்டார்கள்.

9:45 மணிக்கு போட்டி தொடங்கினாலும் முழுமையாக 20 ஓவர் போட்டியாக நடந்துவிடும். 9:45 க்குள் போட்டியை தொடங்க முடியாவிடில் அடுத்த ஒவ்வொரு 4.25 நிமிடங்களுக்கும் ஒரு ஓவர் குறைந்துகொண்டே வரும். கடைசியாக 11:56 மணிதான் Cut Off Time. 11:56 மணிக்குள் போட்டி தொடங்கிவிட்டால் குறைந்தபட்சமாக 5 ஓவர் போட்டியையாவது நடத்திவிட முடியும். 11:56 மணியையும் கடந்துவிட்டால் அவ்வளவுதான். இன்றைய நாளில் போட்டி நடக்காது. இறுதிப்போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் போட்டி நாளை நடைபெறும்.
ஒருவேளை போட்டி ஆரம்பித்து இடையில் மழை பெய்து போட்டி தடைபட்டு அதற்கு மேல் தொடங்கவே முடியவில்லையெனில், இன்றைய நாளில் விட்ட இடத்திலிருந்து போட்டி நாளை நடக்கும்.