INDIA : `முக்கிய கூட்டம்; ஆனாலும் முக்கிய கட்சிகள் மிஸ்ஸிங்’ - வலுவிழக்கிறதா இந்தியா கூட்டணி?
பஹல்கம் தீவிரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தானுக்கு எதிரான போர் நிறுத்தம், போர் நிறுத்தத்துக்கு தான்தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருவது என கடந்த சில மாதங்களாக பல்வேறு விவகாரங்கள் நடந்து வரும் நிலையில், `இவை அனைத்தும் குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும். எனவே நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை நடத்த வேண்டும்’ என இந்தியா கூட்டணி கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இதற்காக 3.6.25(இன்று) அன்று டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பஹல்கம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் குரல் ஒருமித்த குரலில் ஒலிக்கும் கூட்டமாக எதிர்பார்க்கப்பட்டது.
டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே ஏற்பட்டுள்ள பிளவு அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்
அதிருப்தியில் கூட்டணி கட்சிகள்:
இந்தியா கூட்டணியைப் பொறுத்தவரை காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் என 37 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
இதில் 20 கட்சிகளுக்கு மேல் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களை கொண்டுள்ளது.
ஆனால் டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து திபேந்தர் சிங் ஹூடா, ஜெய்ராம் ரமேஷ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா பிரிவிலிருந்து சஞ்சய் ராவத், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியிலிருந்து மனோஜ் ஜா, சமாஜ்வாதி கட்சியிலிருந்து ராம்கோபால் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து டெரிக் ஓ பரைன் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு முன்பாக பேசிய சஞ்சய் ராவத், `இந்த கூட்டம் தொடர்பாக தனக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு எதுவும் விடுக்கப்படவில்லை’ என கூறியிருந்தார். இருந்தாலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசிக்கிறார்கள் என தெரிந்து கொண்டு கலந்து கொண்டதாக அவர் கூறினார்.
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து யாரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தொடங்கிய காங்கிரஸ் கட்சி - ஆம் ஆத்மி கட்சி இடையிலான மோதல் தான் இதற்கு காரணம் என சொல்லப்பட்டிருக்கிறது. இனி வரக்கூடிய நாட்களில் காங்கிரஸ் கட்சியுடன் சமூக உறவை தொடரப்போவதில்லை என ஆம் ஆத்மி கட்சி முடிவெடுத்திருப்பதாகவும் அது இந்தியா கூட்டணி செயல்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் சொல்லப்படுகின்றது
இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சியான திமுகவிலிருந்தும் யாரும் கலந்து கொள்ளவில்லை. இத்தனைக்கும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம் அப்துல்லா டெல்லியில் தான் கூட்டம் நடைபெறும் போது இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டம் குறித்து முறையான அழைப்பு எதுவும் கொடுக்கப்படவில்லை என்பதால் தான் திமுக தரப்பிலிருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது.
மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கேரளா காங்கிரஸ் போன்ற பெரும்பாலான இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இந்த கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்படவில்லை.

இந்தியா கூட்டணி அமைய முக்கிய காரண கர்த்தாக்களில் ஒருவராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவர், ஏற்கனவே, `ஆபரேஷன் சித்தூர் தொடர்பான சிறப்பு கூட்ட தொடரை நடத்துவது தேவையற்றது’ என்றும், `இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு எந்த நிபந்தனையும் இன்றி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என கூறியிருந்தார். எனவே அவர் கட்சி சார்பிலும் யாரும் கலந்து கொள்ளவில்லை.
டெல்லியில் நடந்த கூட்டத்திற்கு பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஜெயராம் ரமேஷ், டெரிக் ஓ பிரைன் ஆகியோரிடம் இது குறித்து கேட்டபோது, `சில கட்சிகளால் தனிப்பட்ட காரணங்களுக்காக தான் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை’ என்றும் `சிறப்பு கூட்டத் தொடரை கூட்ட வேண்டும் என வலியுறுத்தி 16 கட்சிகள் கடிதத்தில் கையொப்பம் இட்டிருப்பதாகவும்’ கூறினார்கள். ஆனால் கையப்பமிட்ட 16 கட்சிகள் யார் யார் என்று தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
அடுத்தது என்ன?
ஆப்ரேஷன் சிந்தூர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே நிலவும் கருத்து வேறுபாடுகள் இந்தியா கூட்டணி கட்சியினர் ரசிக்கவில்லை. பாகிஸ்தான் ராணுவத்தால் இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சசி தரூர், சல்மான் குர்ஷித் உள்ளிட்டோர் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகளை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இது கட்சிக்குள் கடுமையான மோதலை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க இந்தியா கூட்டணி கட்சிகள் தயங்குகின்றன.
மேலும் தமிழ்நாட்டைத் தவிர பீகார், கேரளா என அடுத்தடுத்து வர உள்ள சட்டமன்ற தேர்தல்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் பெரும்பாலும் எதிரெதிர் துருவங்கள் ஆகத்தான் களம் காண்கின்றனர். இதனால் ஏற்பட்டுள்ள பிளவு வரக்கூடிய நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.