பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனுமதியின்றி பாடல்! ரூ.2 கோடி இழப்பீடு கோரும் சோனி மியூசி...
ஆபரேஷன் கொங்கு: ஆட்டத்தை ஆரம்பித்த செந்தில் பாலாஜி; கோவை திமுக மாநகர் மாவட்ட செயலாளர் மாற்றம் - ஏன்?
கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர்
திமுக கோவை மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்தவர் நா.கார்த்திக். இவரை திமுக தீர்மானக்குழு அணியின் செயலாளராக நியமனம் செய்துவிட்டு,
பீளமேடு பகுதிச் செயலாளராக இருந்த துரை. செந்தமிழ் செல்வனை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளராக நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இந்த அதிரடி மாற்றம் கொங்கு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நா.கார்த்திக் மாற்றம் ஏன்?
இதன் பின்னணி குறித்து கோவை திமுக நிர்வாகிகளிடம் பேசியபோது, “கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு கோவை மாவட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு செந்தில் பாலாஜி பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.

அப்போது கோவை திமுகவில் பவர்புல்லாக இருந்தவர் நா. கார்த்திக் மட்டும்தான். துணை மேயர், எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் பதவிகளில் இருந்தார்.
நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், சமுதாய ரீதியாக அமைச்சர் எ.வ.வேலுவின் துணையும் இருந்தது.
செந்தில் பாலாஜி
பொதுவாக செந்தில் பாலாஜி செல்லும் இடங்களில் ஏற்கெனவே உள்ள பவர் சென்டர்களை மாற்றி, தனக்குத் தகுந்த நபர்களை நியமனம் செய்வது வழக்கம். அந்த வகையில் கோவையிலும் மாற்றங்கள் செய்தார்.

அவர் சிறைக்குச் செல்வதற்கு முன்பு நடைபெற்ற உள்கட்சித் தேர்தலின்போதே கார்த்தியின் இடத்தில் வேறு ஒருவரை நியமனம் செய்யத் திட்டமிட்டிருந்தார்.
சிறை சென்றதால் அது தாமதமானது. மறுபக்கம் கார்த்திக்கு எதிரான புகார்களும் வரிசை கட்டின.
2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தன் மனைவியை மேயராக்குவதற்காக, அவருக்குப் போட்டியாளராக இருந்த மீனா ஜெயக்குமாருக்கு எதிராக அரசியல் செய்தது, பதவிகளுக்குப் பணம் வசூல் வேட்டையில் இறங்கியது, கோவை எம்.பி. ராஜ்குமாருடன் மோதல், கோத்தகிரியில் எஸ்டேட் வாங்கியது என்று அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வந்தார்.

அதற்கு சரியான நேரம் பார்த்து காத்திருந்தார் செந்தில் பாலாஜி. கரூரில் திமுக முப்பெரும் விழாவை நடத்தி தலைமையிடம் ஸ்கோர் செய்திருந்த நேரத்தைப் பயன்படுத்தி மாற்றியிருந்தார்.
செந்தமிழ்ச் செல்வன்
அவருக்கு பதிலாக மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள செந்தமிழ்ச் செல்வன் பாரம்பர்ய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். கார்த்தியைப் போலவே இவரும் நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
இளைஞரணி துணை அமைப்பாளர், பகுதிச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் இருந்தவர். பெரிதாக எந்தச் சர்ச்சையிலும் சிக்காதவர்.

தன் கைக்கு அடக்கமாக இருப்பார் என்பதால் செந்தில் பாலாஜி இவரை டிக் அடித்துள்ளார். இது ஆரம்பம் தான். தேர்தல் நெருங்க நெருங்க செந்தில் பாலாஜி கொங்கு மண்டலத்தில் மேலும் பல மாற்றங்களை அரங்கேற்றுவார்” என்றனர்.