செப். 28 திறக்கப்படுகிறது தி.நகர் மேம்பாலம்! முடிவுக்கு வரும் வாகன நெரிசல்
மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கு: விடுவிக்கப்பட்ட ராணுவ அதிகாரிக்குப் பதவி உயர்வு; பின்னணி என்ன?
மகாராஷ்டிரா மாநிலம் மாலேகாவில் 2008ம் ஆண்டு மசூதி அருகில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்து 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாலேகாவில் நடந்த இக்குண்டு வெடிப்பு சம்பந்தமாக சில இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். முன்னாள் எம்.பி.யும், பெண் துறவியுமான பிரக்யா சிங், ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் உட்படப் பலர் கைது செய்யப்பட்டனர்.

பிரசாத் புரோஹித் 8 ஆண்டுகள் சிறையிலிருந்த பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மாலேகாவ் குண்டு வெடிப்புக்குத் தேவையான நிதி, ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்பாடு செய்ததாக லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் மீது தீவிரவாத தடுப்புப் படை குற்றம் சாட்டி இருந்தது.
அபினவ் பாரத் என்ற இந்து அமைப்போடு சேர்ந்து குண்டு வெடிப்புக்கான சதி வேலையில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கை ஆரம்பத்தில் மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் படையும் பின்னர் தேசிய புலனாய்வு ஏஜென்சியும் விசாரித்தன.
மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இவ்வழக்கில் கடந்த ஜூலை 31ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து கோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் மீண்டும் ராணுவத்தில் சேர்ந்து இருக்கிறார். அவரைக் கௌரவிக்கும் விதமாக அவருக்கு ராணுவத்தில் கர்னல் அந்தஸ்து கொடுக்கப்பட்டு பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பணியில் சேர்ந்திருந்ததாலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பிரசாத் புரோஹித் ராணுவத்திலிருந்து கர்னலாக ஓய்வு பெறுகிறார்.