இந்தியாவின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தான்
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா தாக்குதல் நடத்தியதைத்தொடர்ந்து அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரிலுள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் ஏப். 22-ஆம் தேதி தாக்குதல் நடத்தினா். இந்த கொடூர பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளுமோ என்ற பதற்றம் நீடிக்கிறது.
இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து, இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திடீர் தாக்குதல் நடத்தியது.
கோட்லி, பஹ்வால்பூர், முஸாஃபர்பாத் உள்ளிட்ட பகுதிகளில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இருப்பினும், பாகிஸ்தான் ராணுவத் தளவாடங்களைக் குறிவைத்து, எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
அதேசமயம் தாக்குதல் குறித்து இந்திய ராணுவத்தின் எக்ஸ் பக்கத்தில், நீதி நிலைநாட்டப்பட்டது, "ஜெய் ஹிந்த்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சௌத்ரி கூறியிருப்பதாவது, சமீபத்தில், எதிரியான இந்தியா மூன்று இடங்களில் கோழைத்தனமான வான்வழித் தாக்குதல்களை நடத்தின.
பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய ராணுவம் திடீர் தாக்குதல்!
இந்த கோழைத்தனமான மற்றும் வெட்கக்கேடான தாக்குதல் இந்தியாவின் வான்வெளியில் இருந்து நடத்தப்பட்டது. அவர்கள் பாகிஸ்தானின் வான்வெளிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. பாகிஸ்தான் இதற்கு பதிலடி கொடுக்கும் என்பதை திட்டவட்டமாகச் சொல்ல விரும்புகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.