உலகம் கவனிக்கிறது: பாகிஸ்தான் - பயங்கரவாதிகள் உறவு குறித்து இந்தியா!
ஆபரேஷன் சிந்தூரின் போது நடந்த பாதிப்புகள் குறித்தும், தங்களுக்கும் பாகிஸ்தான் நாட்டுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் பயங்கரவாத அமைப்புகள் மாறி மாறி உண்மையைக் கொட்டி வரும் நிலையில், உலகம் கவனித்துக் கொண்டிருக்கிறது என்று இந்தியா தெரிவித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என பாகிஸ்தான் ராணுவ தளபதிதான் உத்தரவிட்டார் என்று ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவர் நேற்று விடியோ வெளியிட்டிருந்த நிலையில், இன்று தங்களுக்கு ஏற்பட்ட சேதம் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டிருக்கிறது. முன்னதாக, லஷ்கர் அமைப்பும், பாகிஸ்தான் தரப்பில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கம் கொடுத்திருந்தது.
இந்த நிலையில், மத்திய வெளியுறவு விவகாரத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், வாராந்திர செய்தியாளர் சந்திப்பின் போது, பயங்கரவாதம் தொடர்பான விஷயங்கள் குறித்து, உலகம் தற்போது நன்கு அறிந்திருக்கும். பாகிஸ்தான் அரசுக்கும் ராணுவத்துக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் இருக்கும் இணைப்பை உலகமே புரிந்துகொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் அளித்த தகவல்கள், இதனை உறுதி செய்வதாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
பாகிஸ்தானில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா மே 7ஆம் தேதி நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் கடுமையான நாசத்தை சந்தித்ததாக லஷ்கர் மற்றும் ஜெய்ஸ் அமைப்பின் தலைவர்கள் ஒப்புக் கொண்ட நிலையில், இந்தியா தரப்பில் இது தெரிவிக்கப்படுள்ளது.
ஆபரேஷன் சிந்தூரின்போது ஜெய்ஷ்-ஏ-முகமது (ஜேஇஎம்) பயங்கரவாத இயக்கத் தலைவா் மசூத் அசாரின் குடும்பம் அழிந்துவிட்டதாக அந்த இயக்கத்தின் தளபதி இலியாஸ் காஷ்மீரி அண்மையில் தெரிவித்திருந்தார்.
மேலும், முரித்கேவில் இருந்த பயங்கரவாத முகாம்கள் நாசமானதாகவும், அதன் முன்தான் தான் நின்று கொண்டிருப்பதாகவும் விடியோ வெளியிட்டிருந்தார். மேலும், பாகிஸ்தான் அரசின் உதவியோடு அதனை மீண்டும் அதைவிட மிகப்பெரிய அளவில் கட்டமைப்போம் என்றும் விடியோவில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
India clarifies Pakistan-terrorist ties, saying the world is watching.
இதையும் படிக்க... செப். 21 சூரிய கிரகணம் இந்தியாவில் காண முடியாதது ஏன்?