சவேரா ஹோட்டலில் நடைபெற்ற ஃபுடாதான் 4.0 டி-ஷர்ட் மற்றும் பதக்கம் வெளியீட்டு விழா
“நோ ஃபுட் வேஸ்ட்” நிறுவனம், பங்காளிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் இணைந்து, வரும் ஃபுடாதான் 4.0 நிகழ்வுக்கான அதிகாரப்பூர்வ டி-ஷர்ட் மற்றும் பதக்கத்தை சென்னையின் சவேரா ஹோட்டலில் வெளியிட்டது.
ஃபுடாதான் 4வது பதிப்பு, வரும் 28 செப்டம்பர் 2025 அன்று மயாஜால், ஈசிஆர், சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த ஓட்டப்பந்தயம் “உணவு இழப்பு மற்றும் வீணாக்கத்தை குறைப்பது” என்ற வலுவான செய்தியை எடுத்துரைக்கிறது. உணவின் பொறுப்பான பயன்பாடு மற்றும் விழிப்புணர்வை உருவாக்க சமூகத்தை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் இது நடத்தப்படுகிறது.

விழாவில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையர் திரு. ஆர். லல்வேனா, ஐஏஎஸ் தலைமையேற்று, சென்னை உணவு பாதுகாப்புத் துறை பொறுப்பதிகாரி டாக்டர் தமிழ்ச் செல்வன், எஃப்எஸ்எஸ்ஏஐ அதிகாரிகள், சென்னை ரன்னர்ஸ் தலைவர் திரு. யாசிர், மற்றும் பல ஓட்டக் கிளப்புத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் ஃபுடாதான் தூதர்கள், பேஸர்கள், ஹோட்டல் துறை சமையலர்கள், உணவுத் துறை அதிகாரிகள் மற்றும் பிரபல வானொலி பிரபலமான ஆர்ஜே தீனா ஆகியோரும் பங்கேற்றனர்.
“நோ ஃபுட் வேஸ்ட்” அமைப்பின் வாராந்திர உணவு தானதாரரான திருமதி புனிதா யூசுப் அவர்களுக்கு சிறப்பு பாராட்டு வழங்கப்பட்டது. இவர் சமூக அக்கறையின் பிரதிநிதியாக வலியுறுத்தப்பட்டார்.
ஆச்சி நிறுவனம் முதன்மை ஆதரவு வழங்க, ஃபுட் ஹப் இணை ஆதரவாளராக இணைந்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பங்காளிகள், தன்னார்வலர்கள் மற்றும் நல்வாழ்வாளர்களின் ஆதரவுடன் இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்படுகிறது.

விழாவில் உரையாற்றிய ஏற்பாட்டாளர்கள், ஒவ்வொரு பதிவு செய்வதற்கும் 5 கிலோ மளிகைப் பொருட்கள் தானமாக வழங்கப்படும் என்றும், அது உணவுப் பாதுகாப்பு முயற்சிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் வலியுறுத்தினர்.