சிறுமிக்கு பாலியல் தொல்லை; போலீஸ் அலட்சியம்? - அதிரடி உத்தரவிட்ட கோர்ட்... மும்பையில் கைதான நபர்!
ச
துப்பாக்கி முனையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று தலைமறைவாகி இருந்த தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த பாஜக முன்னாள் நிர்வாகி நீலகண்டனை மும்பையில் வைத்து ஆலங்குளம் போலீசார் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், சுரண்டையைச் சேர்ந்த நீலகண்டன் என்பவர் தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்தில் மேலாளராகவும், அதேசமயம் பாஜக செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2023 ஆம் ஆண்டு பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள குடும்ப நண்பரின் வீட்டிற்கு சென்ற அவர், அங்கு நண்பரின் மகள் 15 வயது சிறுமி தனியாக இருந்துள்ளார். அப்போது நீலகண்டன், சிறுமி மட்டும் தனியாக இருந்ததை பயன்படுத்திக்கொண்டு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். முற்றிலும் பயந்துபோன அந்தச் சிறுமி, அலறியபடி வீட்டை விட்டு வெளியே ஓட முயன்றுள்ளார். அப்போது இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று தன்னிடமிருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.
எனினும் சிறுமி தனது பெற்றோரிடம் தனக்கு நடந்த துன்புறுத்தலை கூறியதையடுத்து, அவர்கள் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை மேற்கொள்ளாமல் புகாரை கிடப்பில் போட்டதால், நீண்ட காலம் வழக்குபதிவு செய்யப்படாமல் இருந்தது. இதனால் வேதனையடைந்த சிறுமியின் பெற்றோர் விரைவாக நடவடிக்கை எடுக்க கோரி தென்காசி எஸ்பி-யிடம் மனு அளித்தனர். அதன் பின்னரும் வழக்குப்பதிவு செய்யப்படாததால் மதுரை உயர் நீதிமன்ற கிளையை நாடி மனுத்தாக்கல் செய்தனர். விசாரணை மேற்கொண்ட நீதிபதி உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கடுமையான உத்தரவு பிறப்பித்தார்.
நீதிபதியின் உத்தரவின் பேரில் மூன்று பிரிவுகளின் கீழ் நீலகண்டன் மீது கடந்த மாதம் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து தன்னைப் போலீசார் தேடி வருவதை அறிந்த நீலகண்டன் தலைமறைவாகினார். தனிப்படை அமைத்த காவல்துறையினர் தொழில்நுட்ப உதவிகளுடன் நீலகண்டன் மும்பைக்குத் தப்பிச் சென்றதை கண்டுபிடித்தனர். பின்னர் ஆலங்குளம் தனிப்படை போலீசார் மும்பை சென்று அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் தென்காசி எஸ்பி எஸ். அரவிந்த் பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஏ.கே. கமல் கிஷோர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நீலகண்டனை கைது செய்ய உத்தரவிட்டார்.