"படங்களை உருவாக்குவதை விட கடினம்; அவமானகரமாகவும் இருந்திருக்கிறது!" - 'உரியடி' த...
`உன்னை ராணிபோல பார்த்துக்கொள்கிறேன்’ - பெண் ஊழியரிடம் அத்துமீறினாரா சுகாதாரத்துறை அதிகாரி?
திருப்பத்தூர் மாவட்டம், மான்கானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்த பெண் (வயது 39). இவர், திருப்பத்தூரில் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்துக்கு தனது கணவருடன் வந்து புகார் மனு ஒன்றை அளித்தார் அப்பெண் ஊழியர்.
அந்த மனுவில், ``நான் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் கடந்த 10-2-2025 அன்று முதல் பணியில் இருந்துவருகிறேன். அங்கு அலுவலக (நிர்வாகம்) கண்காணிப்பாளராக பணிபுரியும் அதிகாரி, நான் பணியில் சேர்ந்த நாள் முதல் ஒன்றரை மாதம் வரை எனக்கு அலுவலக பணி எதுவும் ஒதுக்காமல், `நான் அழைக்கிறப்ப மட்டும் வந்து, நான் சொல்ற வேலையை செய்’ என்று இரட்டை அர்த்த வார்த்தைகளுடன் பேசுகிறார்.

மேலும், `இந்த அலுவலகத்தில் நான் இருக்கிறவரை உன்னை ராணிபோல பார்த்துக்கொள்கிறேன்’ எனவும் அருவறுக்கத்தக வகையில் பேசுகிறார். வேலை இருப்பதாக அறைக்குள் அழைத்தும் ஒன்றரை மணி நேரமாக எதுவும் பேசாமல் உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்கிறார். நான் `என்ன பணி இருக்கிறது சார்... சொல்லுங்க செய்கிறேன்?’ என்று கேட்டாலும், `சும்மா நில்லு. உனக்கு என்ன கஷ்டம்’ எனக் கூறிவிட்டு, அவர் உற்றுப் பார்த்து அறுவறுக்கத் தக்க செயல்களையே தொடர்ந்து செய்கிறார்.
இது குறித்து மாவட்ட சுகாதார அலுவலரிடம் கூறினேன். அதற்கு `ஏம்மா, நீ இன்னும் பணி நிரந்தரமே ஆகல. உயரதிகாரிகள் சொல்படி கேட்டால் தானேம்மா எல்லாம் நல்லபடியாக இருக்கும்’ எனக் கூறுகிறார். நாளாக நாளாக கண்காணிப்பாளரின் பாலியல் சீண்டல்களும், பேச்சுகளும் அதிகரித்து வருகிறது. எனவே, எனக்கு வேலைக்கு செல்ல பயமாகவும், பதற்றமாகவும் இருக்கிறது. எனது தரப்பு நியாயத்தை உணர்ந்து தகுந்த நடவடிக்கை எடுத்து, அச்சமின்றி பணிபுரிய எனக்கு பணி பாதுகாப்பு வழங்க பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.
பெண் ஊழியரின் இந்த புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அப்பெண், ``என் அம்மா கிராம சுகாதார செவிலியராக இருந்தார். பணியின்போது அவர் உயிரிழந்துவிட்டதால், கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணி எனக்கு வழங்கப்பட்டது. மாவட்ட சுகாதார அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்து மூன்றரை மாதம்தான் ஆகிறது. அதற்குள்ளாக என்னுடைய மேலதிகாரியான அந்த கண்காணிப்பாளர், பாலியல் ரீதியாக நிறைய தொல்லைகள் கொடுக்கிறார்.
என்னை அவரின் அறையில் நிற்க வைத்து அரைக்கண்ணில் பார்ப்பது, குறுகுறுவென பார்ப்பது என பாலியல் ரீதியாக பேசுகிறார். `இந்த மாதிரி டிரஸ் போடாதீங்க... அந்த மாதிரியான டிரஸ் போடுங்க. புடவை தான் உங்களுக்கு நல்லா இருக்கு’ என்று பேசும்போது, எனக்கு மனஉளைச்சல் ஏற்படுகிறது. வேலையை விட்டுவிடலாம் என நினைத்தேன். ஆனால், அரசு ஊழியருக்கே பாதுகாப்பு இல்லை என்கிற ஆதங்கத்தில்தான் இப்போது புகாரளித்திருக்கிறேன். அவர் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு நியாயம் வழங்க வேண்டும்’’ என்றார்.