பொதுத்துறை வங்கி குறியீடு 2% உயர்வு!
மும்பை: இன்றைய வர்த்தகத்தில் பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் வெகுவாக உயர்ந்து முடிந்தன. நிஃப்டி-யில் பொதுத்துறை வங்கி குறியீடு 1.5 சதவிகிதத்திற்கு மேல் உயர்ந்து 7,210 புள்ளிகளாக நிலைபெற்றது.
ஜூன் 6 அன்று ரிசர்வ் வங்கி அதன் பணவியல் கொள்கை கூட்டத்தின் முடிவை அறிவித்த பிறகு பங்குகளின் விலைகளில் வெகுவாக ஏற்றம் கண்டு வருகிறது.
ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமையன்று ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைக்க முடிவு செய்தது அறிவித்தது. மேலும் ரிசர்வ் வங்கியின் ரொக்க இருப்பு விகிதம் தலா 25 அடிப்படை புள்ளிகள் கொண்ட நான்கு தவணைகளில் 100 அடிப்படை புள்ளிகளாகவும் குறைக்கப்பட்டது. இதனால் பொதுத்துறை வங்கி அமைப்பில் சுமார் ரூ.2.5 லட்சம் கோடி வர வாய்ப்புள்ளதாக தெரியவந்தது.
இன்று பாங்க் ஆஃப் இந்தியா பங்குகள் கிட்டத்தட்ட 4 சதவிகிதம் உயர்ந்து ரூ.129 ஆகவும், பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா பங்குகள் 3 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்ந்து ரூ.57 ஆகவும் வர்த்தகமானது. இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பங்குகள் தலா 2 சதவிகிதத்திற்கும் மேலாகவும், பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, சென்ட்ரல் வங்கி மற்றும் யூனியன் வங்கி ஆஃப் இந்தியா ஆகியரின் பங்குகள் தலா 1 சதவிகிதத்திற்கும் மேலாகவும் உயர்ந்து முடிந்தன.
இதற்கிடையில் பாங்க் ஆஃப் பரோடா, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் யூகோ வங்கி பங்குகள் ஓரளவு உயர்ந்து முடிந்தன.
பணவியல் கொள்கை குழு முடிவுக்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஆளுநர் மல்ஹோத்ரா, ரொக்க இருப்பு விகிதம் குறைப்புக்குப் பின்னால் இரண்டு நோக்கங்கள் இருப்பதாக தெரிவித்தார். முதல் நோக்கம் பணப்புழக்கத்தை வழங்குவதும் இரண்டாவது நோக்கம் பணப்புழக்கத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், வங்கிகளுக்கான நிதி செலவையும் இது வெகுவாக குறைக்கும் என்றார்.
தனியார் வங்கிகளின் பங்குகளும் இன்று உயர்ந்த நிலையில் கோடக் மஹிந்திரா வங்கி, ஆக்சிஸ் வங்கி தலா 2 சதவிகிதத்திற்கும் மேலாக அதிகரித்தது.
இதையும் படிக்க: பங்குச் சந்தைகள் 4வது நாளாக உயர்ந்து முடிவு!