`அரசுப் பள்ளிக்கு என்ன குறைச்சல்?' - அரசுப் பள்ளியில் மகளைச் சேர்த்த மாவட்ட நீதி...
"கேரளா மக்களுக்கு பெருமை" - உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் குறித்து பினராயி விஜயன் நெகிழ்ச்சி!
உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான எம்.எஸ்.சி இரினா (MSC IRINA) விழிஞ்ஞம் அதானி துறைமுகத்துக்கு வந்துள்ளது. விழிஞ்ஞம் துறைமுகத்துக்குள் நுழைந்த சரக்கு கப்பலுக்கு வட்டர் சல்யூட் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. 399.9 மீட்டர் நீளமும், 61.3 மீட்டர் அகலமும் கொண்ட இக்கப்பல் 24.346 டி.இ.யூ கண்டெய்னர்களை சுமந்துசெல்லும் திறன் படைத்தது. 4 புட் பால் கிரவுண்ட்களைவிட அதிக பரப்பளவுகொண்டது. இந்த கப்பல் 2023-ல் கட்டப்பட்டதாகும். விழிஞ்ஞம் துறைமுகம் செயல்பட தொடங்கிய பிறகு துறைமுகத்துக்கு வந்துள்ள 347-வது கப்பலாகும். கப்பலில் 35 ஊழியர்கள் உள்ளனர். இந்த கப்பலில் இப்போது 16,000 கண்டெய்னர்கள் உள்ளன. அதில் 3000 கண்டெய்னர்கள் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இறக்கப்படுகின்றன.

இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளதாவது, "உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் விழிஞ்ஞம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சரக்குப் பெட்டக மாற்றுமுனையத்தின் அதிமுக்கிய மையமாக விழிஞ்ஞம் துறைமுகம் மாறி உள்ளது. நாட்டின் முதல் டிரான்ஸ்ஷிப்மெண்ட் துறைமுகமான விழிஞ்ஞம் திறக்கப்பட்டு ஒருமாதத்துக்கு பிறகு உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் இங்கு வந்துள்ளது.

இக்கப்பல் தெற்காசியாவில் முதன் முறையாக விழிஞ்ஞம் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது கேரளா மக்களுக்கு பெருமையான விஷயமாகும். கப்பல் கேப்டனாக கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த வில்லி ஆன்றணி வந்திருப்பது கூடுதல் மகிழ்ச்சியான விஷயம். கப்பல் ஊழியராக கண்ணூரைச் சேர்ந்த அபிநந்த் உள்ளார். உலகின் மிகப்பெரிய கப்பல் வந்ததைத் தொடர்ந்து விழிஞ்ஞம் துறைமுகம் புதிய சரித்திரத்துக்கு சாட்சியாகி உள்ளது" என்றார்.