ராமதாஸ்–அன்புமணி இணைவதற்குச் சிறப்பு யாகம்; "மிகப்பெரிய மாற்றத்தைத் தரும்" - மா....
சிறுவனை சிகரெட் பிடிக்க வைத்து வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது; 2 போலீஸார் சஸ்பெண்ட்.. நடந்தது என்ன?
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம், `102 ரெட்டியூர்’ கிராமத்தில், 9 வயது சிறுவன் சிகரெட் புகைப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. விசாரணையின்போது, அந்த வீடியோ கடந்த ஆண்டு ஜூன் 7-ம் தேதி எடுக்கப்பட்டதாகத் தெரியவந்தது.
பழைய வீடியோவாக இருந்தாலும், வழக்கின் தீவிரத்தன்மைக் கருதி விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டார் மாவட்ட எஸ்.பி ஷ்ரேயா குப்தா. அதன்படி, சிறுவர் நீதிச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், தீவிர விசாரணையில் இறங்கினர்.

புலன் விசாரணையில், அத்னான் என்ற 20 வயது இளைஞன், சிறுவனை புகைக்க வைத்து அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் அத்னானை கைது செய்த போலீஸார் நீதிமன்றக் காவலில் சிறையிலடைத்தனர்.
மேலும், இந்த வழக்கில் திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் அசாருதீன், திருப்பதி ஆகிய 2 போலீஸ்காரர்களும் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கிறது.
இதையடுத்து, 2 போலீஸ்காரர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். ஆயுதப்படை போலீஸ்காரர்கள் அசாருதீன், திருப்பதி இருவருமே 102 ரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தான். இதில் அசாருதீனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த இப்ராஹிம் என்பவருக்குமிடையே முன்பகை இருந்துவருகிறது.
இந்த நிலையில்தான் இப்ராஹிமை பொய் வழக்கில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்பும் திட்டத்துடன் 2 போலீஸ்காரர்களும் அத்னான் மூலமாக சிறுவனை புகைப்பிடிக்க செய்து வீடியோ எடுத்திருக்கின்றனர்.

அந்த வீடியோவை பரப்பி, `தனது பகையாளி இப்ராஹிம்தான் சிறுவர்களை புகைக்கச் செய்தான்’ என பரப்பிவிட்டிருக்கின்றனர். ஆனால், புலன் விசாரணையில் சதித் திட்டம் தெரியவந்ததையடுத்து, அத்னான் கைதுசெய்யப்பட்டார். அவரைத் தூண்டிவிட்ட 2 போலீஸ்காரர்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், போலீஸ்காரர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.