இந்திய அணி எவ்வாறு செயல்படவுள்ளது என்பதைக் காண உலகம் காத்திருக்கிறது: முன்னாள் க...
32 ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பானில் ஆசிய விளையட்டுப் போட்டிகள்; மிதக்கும் கிராமத்தில் வீரர்கள்!
ஜப்பானில் 1994-க்குப் பிறகு 2002-ல் கால்பந்து உலகக் கோப்பை, 2019-ம் ஆண்டில் ரக்பி உலகக் கோப்பை, 2021-ம் ஆண்டில் ஒலிம்பிக் உள்ளிட்ட பல முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தாலும், கடந்த 32 ஆண்டுகளில் முதல்முறையாக அடுத்த ஆண்டுதான் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவிருக்கிறது.
இது, ஜப்பான் நாட்டின் முக்கிய நகரமான நகோயா மற்றும் ஐச்சி நகரங்களில், 2026-ம் ஆண்டு செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

இவ்வாறிருக்க, இதில் பங்கேற்க வரும் சுமார் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள் என 4,600 பேரை "மிதக்கும் கிராமம்" என அழைக்கப்படும் பயணக் கப்பலில் தங்கவைக்கவும், மேலும் 2,400 பேரை ஒரு குறுகிய பேருந்து பயண தூரத்தில் இருக்கும் கப்பல் கொள்கலன்களால் ஆன தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கவும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டிருக்கின்றனர்.
இது குறித்து 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி ஏற்பாட்டாளர்கள், "நகோயா துறைமுகத்தில் நிறுத்தப்படும் ஒரு சொகுசு பயணக் கப்பலைக் குத்தகைக்கு எடுத்து, விளையாட்டுகளில் பங்கேற்க வருகை தரும் வீரர்கள் அதில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் 2,400 பேர் ஒரு குறுகிய பேருந்து பயண தூரத்திலுள்ள கப்பல் கொள்கலன்களால் ஆன தற்காலிக தங்குமிடங்களில் தங்குவர்.
விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் சுமார் 15,000 விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளில் பாதி பேர் இந்த இரண்டு இடங்களில் தங்கவைக்கப்படுவார்கள்.
மீதமிருப்பவர்கள், நீச்சல் போட்டி நடைபெறும் டோக்கியோ நகரிலுள்ள பிற தங்குமிடங்களில் தங்குவார்கள்" என 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐச்சி - நகோயா விளையாட்டு ஏற்பாட்டுக் குழுவின் துணைத் தலைவர் கசுஹிரோ யாகி, "விளையாட்டு வீரர்களின் கருத்துக்களைக் கேட்டோம். அவர்களைத் திருப்திப்படுத்தும் அளவில் சேவை வழங்க விரும்புகிறோம்.
'மிதக்கும் கிராமம்' பயணக் கப்பல் மற்றும் கொள்கலன் வீடுகள் வெவ்வேறு இடங்களில் உள்ளன. ஆனாலும், அவை 10 நிமிடங்களில் பேருந்தில் செல்லக்கூடிய தொலைவில் மட்டுமே உள்ளன.

எனவே, விளையாட்டு வீரர்கள் தங்களுக்குள் பழகுவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. அப்பகுதியில் ஒரு மீன் காட்சியகம் மற்றும் பல்வேறு வித பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன.
வீரர்கள் ஓய்வெடுக்கவும், ஒன்று சேர்ந்து நேரம் செலவிடவும் இந்த இருப்பிடம் சிறப்பாக அமையும்." என்று கூறினார்.
மேலும், தொடர்ந்து பேசிய கசுஹிரோ யாகி, "ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது இன்னுமே கூட இங்கு விழிப்புணர்வு இல்லை.
ஜப்பானில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் குறித்து அறியாதவர்கள் யாருமில்லை என நினைக்கிறேன்.
நாட்டின் மக்கள் தொகையில் பாதி பேருக்கு மட்டுமே ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பற்றித் தெரியும்.
32 வருடங்களுக்கு முன்பு, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடைசியாக ஜப்பானில் நடத்தப்பட்டபோது தற்போதைய இளைஞர்கள் பிறக்கவில்லை.
எனவே, இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு என்பதை அவர்கள் உணர வேண்டும் என விரும்புகிறேன்.
இளைய தலைமுறையினர் விளையாட்டுகளில் பங்கேற்பதை ஆர்வப்படுத்த, தற்காப்புக் கலைகளை விளையாட்டுகளில் சேர்க்க விரும்புகிறோம்.

மின் விளையாட்டுகளை (eSports) பெரியளவில் நடத்துவது இதுவே முதல் முறையாக இருக்கும்.
அதிக உடற்பயிற்சி செய்ய வாய்ப்பு கிடைக்காத வயதானோர்க்கு, இந்த மின் விளையாட்டுகள் உதவியாக இருக்கும்.
பல்வேறு வயதினரும் மின் விளையாட்டுகளைப் பற்றி மேலும் அறிய இது ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தும் என நினைக்கிறேன்" என்று ஆசிய விளையாட்டுகளின் ஏற்பாடுகள் குறித்துப் பேசினார்.