"படங்களை உருவாக்குவதை விட கடினம்; அவமானகரமாகவும் இருந்திருக்கிறது!" - 'உரியடி' த...
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிதியில் திருமண மண்டபம் - அரசாணைக்கு உயர் நீதிமன்ற கிளை தடை
பழநி தண்டாயுதபாணி கோயில் நிதியை எடுத்து, திருமண மண்டபம் கட்டுவதற்கு அரசு வெளியிட்ட அரசாணைக்கு தடை விதித்து மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வழக்கு தாக்கல் செய்த இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம.ரவிக்குமார் கூறும்போது, "இந்து சமய அறக்கொடைகள் சட்டத்தில் பிரிவு 66-ல் என்னென்ன பணிகளுக்கு கோயிலின் உபரி நிதியை செலவு செய்ய வேண்டும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி இந்து தர்மத்தை வளர்க்கவும், இந்து ஆகம விதிகளை கற்றுக் கொடுக்கவும், அருகிலுள்ள நலிவடைந்த கோயிலுக்கு செலவு செய்வது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் அந்த பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோயிலின் நிதியை எப்படி காலி செய்வது என யோசித்து, கோயிலில் உள்ள உபரி நிதிகளை எடுத்து ஆங்காங்கே திருமண மண்டபம், ரிசார்ட்டுகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றை கட்டுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டு, அதன்படி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு கோயில்களில் சுமார் 80 கோடி ரூபாய் அளவிற்கு கையிருப்பை கரைக்க முடிவு செய்தனர்.
மேற்படி அரசானையின்படி பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் நிதியிலிருந்து ரூ. 6 கோடியே 30 லட்சம் பணத்தை எடுத்து கள்ளிமந்தயம் சாலையில் உள்ள பெருமாள் கோயில் நிலத்தில் திருமண மண்டபம் கட்ட மற்றொரு அரசாணை வெளியிடப்பட்டது.
இதற்கு முன்னதாக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிஅரசர் அமர்வு இதுபோன்று கோயில் நிதியை தவறாக செலவு செய்யக்கூடாது எனவும், நிதி இருக்கிறது என்பதற்காக திருமண மண்டபம் கட்டுவது போல் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தக் கூடாது எனவும் தெளிவாக உத்தரவிட்டிருந்தது. அதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றமும் சமீபத்தில் தள்ளுபடி செய்தது.

மேற்படி உத்தரவுகளின்படி, மேற்படி அரசாணையை எதிர்த்து இந்து தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்த வழக்கு மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் நீதி அரசர்கள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் மரியா கிளாட் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுவை பரிசீலனை செய்த உயர் நீதிமன்றம் மேற்படி அரசாணைக்கு தடைவிதித்ததோடு மூன்று வாரங்களுக்கு வழக்கை தள்ளி வைத்தும் உத்தரவிட்டுள்ளது" என்றார்.