`விஜய் வீட்டில் ஐ.டி ரெய்டு.. நான் சம்பந்தப்பட்டிருந்தேனா?’ - தவெகவில் இணைந்த முன்னாள் IRS அருண்ராஜ்
விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண் ராஜ் இன்று விஜய்யின் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.

தவெகவில் இணைந்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், ''இது எனக்கு ரொம்பவே சந்தோஷமான நாள். சிறுவயது முதலே மதச்சார்பற்ற அனைவரையும் உள்ளடக்கிய அரசியலின் மீது எனக்கு விருப்பம் உண்டு. தேர்தல் வெற்றியை கடந்து அடிப்படை சமூக அரசியல் மாற்றத்துக்காக தலைவர் எடுத்திருக்கும் இந்த பிரயத்தனத்தில் என்னையும் இணைத்துக் கொள்வதில் மகிழ்ச்சி.
நன்றாக பணி செய்தேன் என்கிற திருப்தி இருக்கிறது!
எனக்கு எந்தக் கட்சியில் இணைய வேண்டும் என்கிற சாய்ஸே இல்லை. ஏனெனில், எல்லா கட்சிகளையும் இத்தனை ஆண்டுகளாக பார்த்துவிட்டோம். முதலில் நான் ஒரு சாமானிய மனிதன். சாமானிய மனிதர்கள் மாற்றம் வேண்டும் என்றே நினைக்கிறார்கள். சமூகத்துக்கு எதாவது செய்ய வேண்டும் என்றுதான் சிவில் சர்வீஸூக்கு வந்தேன். நன்றாக பணி செய்தேன் என்கிற திருப்தி இருக்கிறது.

இதற்கு மேலும் எதாவது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் பொது வாழ்வுக்கு வந்திருக்கிறேன். ஜனநாயக நாட்டில் மக்களிடம்தான் உண்மையான அதிகாரம் இருக்கிறது. தவெகவில் மட்டும்தான் கொள்கைப்பிடிப்பு இருக்கிறது. வேறு யாரிடமும் இல்லை. விஜய் வீட்டுக்கு வருமானவரித்துறை ரெய்டு வந்த சம்பவத்தில் நான் சம்பந்தப்பட்டிருந்தேன் என்பதில் உண்மையில்லை.' என்றார்.