பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க ஸ்டாலினுக்கு அவசியம் இல்லை! - இபிஎஸ்
திருப்பூர்: இன்ஸ்டாகிராம் குழுவால் உருவான போட்டி; சாலையில் பள்ளி மாணவிகள் மோதிக் கொண்ட பின்னணி என்ன?
திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் மாநகராட்சிப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 படிக்கும் சில மாணவிகள் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் குழு ஆரம்பித்து, சமூக வலைத்தளங்களில் போட்டோ மற்றும் வீடியோக்களைப் பதிவிட்டு வந்துள்ளனர்.
அதேபோல், திருப்பூரிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசுப் பள்ளி மாணவிகளும் இதுபோலவே இன்ஸ்டாகிராமில் குழு தொடங்கி தங்கள் பதிவுகளைப் போட்டு வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் யார் குழு பெரியது என்ற மோதல் ஏற்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் சண்டை முற்றியதில், கோபமடைந்த திருப்பூர் மாநகராட்சிப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசுப் பள்ளிக்குப் பேருந்தில் வந்துள்ளனர்.
பின்னர், அந்தப் பள்ளிக்குச் சென்ற மாணவிகள், அங்கிருந்த மாணவிகளிடம் சாலையிலேயே சண்டை போட்டுள்ளனர். இந்தச் சண்டை பெரிதானதில் அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாணவிகள் தாக்கிக் கொள்வதைப் பார்த்து பொதுமக்கள் அதைத் தடுக்க முற்பட்டுள்ளனர். தடுக்க முற்பட்டவர்களுடன் மாணவிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்துக்கும், காவல்துறைக்கும் தகவல் கிடைக்க போலீஸாரும், பொதுமக்களும் சேர்ந்து மாணவிகளைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொறுப்பு) காளிமுத்து கூறுகையில், "இரண்டு தரப்பு மாணவிகளின் கல்வி பாதிக்காத வகையில் அவர்களுக்கு ஆலோசனை வழங்க பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாணவிகளின் பெற்றோரை வரவழைத்துப் பேசவுள்ளோம்" என்றார்.