நடிகர் சைஃப் அலிகான் மீதான தாக்குதல்; ஒரே பிளேடின் 3 துண்டுகள் - 1000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
மும்பையில் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் வீட்டிற்குள் நுழைந்த திருடன், சைஃப் அலிகானை தாக்கிவிட்டு தப்பிச்சென்றுவிட்டான். திருட வந்த நபர் சைஃப் அலிகானின் முதுகு பகுதியில் பிளேடால் தாக்கியதில் கடும் காயம் ஏற்பட்டது. மும்பை பாந்திராவில் உள்ள சைஃப் அலிகான் வீட்டில் நடந்த இத்தாக்குதலில் சைஃப் அலிகானின் குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக தப்பித்தனர். குற்றவாளியும் தப்பித்துவிட்டான். இத்தாக்குதல் குறித்து மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.
மூன்று நாட்கள் தீவிர தேடுதலுக்கு பிறகு மும்பை அருகில் உள்ள தானே என்ற இடத்தில் நள்ளிரவில் புதருக்குள் மறைந்திருந்த ஷரிபுல் இஸ்லாம் என்ற நபர் கைது செய்யப்பட்டார். திருடும் நோக்கத்தில் சைஃப் அலிகான் வீட்டிற்குள் நுழைந்த ஷர்புலிடம் விசாரித்த போது அவர் வங்கதேசத்தை தேர்ந்தவர் என்று தெரிய வந்தது. மேற்கு வங்கம் வழியாக ஆற்றை கடந்து இந்தியாவிற்குள் நுழைந்து அங்கிருந்து மும்பை வந்தது தெரிய வந்தது.

தாக்குதல் சம்பவம் நடந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் போலீஸார் இவ்வழக்கில் மும்பை பாந்திரா கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். ஆயிரத்திற்கும் அதிகமான பக்கங்களை கொண்ட அக்குற்றப்பத்திரிகையில் சைஃப் அலிகான் உடம்பில் இருந்து அகற்றப்பட்ட பிளேட் துண்டு, ஷரிபுலிடமும், அவன் தூக்கி எறிந்த இடத்தில் இருந்தும் மீட்கப்பட்ட பிளேட் துண்டுகள் சேர்க்கப்பட்டுள்ளது. அதோடு சைஃப் அலிகான் வீட்டில் பதிவாகி இருந்த குற்றவாளியின் கைரேகை தொடர்பான தடயவியல் அறிக்கையும் குற்றபத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 3 பிளேட் துண்டுகளும் ஒரே பிளேடின் உடைந்த பகுதிகள் என்று பின்னர் தெரிய வந்தது.
ஷர்புல் இவ்வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று கோரி தாக்கல் செய்த மனுக்களை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. தாக்குதலுக்கு பிறகு சைஃப் அலிகான் மும்பை பாந்திராவில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஒரு வாரத்திற்கு பிறகு ஜனவரி 21ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சைஃப் அலிகானை நள்ளிரவில் மருத்துவமனையில் சேர்த்த ஆட்டோ டிரைவரை அழைத்து சைஃப் அலிகான் நன்றி தெரிவித்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.