வக்பு : `தனக்கு எதிரான வழக்கை தானே விசாரிப்பதற்கு சமம்’ - உச்ச நீதிமன்ற விசாரணையில் நடப்பது என்ன?
வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், ஏ.ஐ.எம்.ஐ.எம் உள்ளிட்ட 6 கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ்நாட்டில் இருந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, நடிகர் விஜய்யின் தவெக மற்றும் ஏராளமான இஸ்லாமிய அமைப்புகள் பொதுநல நிறுவனங்கள், தனிநபர்கள் என 70-க்கும் அதிகமான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் ஒன்றாக சேர்த்து விசாரிக்கப்பட்டது.
`வாதங்களை மட்டும் கேட்போம்’
``இந்த விவகாரத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இவை அனைத்தையும் தனித்தனியாக விசாரிப்பது என்பது இயலாத காரியம். எனவே நாங்களாக ஒரு பட்டியலை தயாரித்து, அவர்களது வாதங்களை மட்டும் கேட்போம் அல்லது நீங்களே உங்களுக்குள் முடிவு செய்து யார் யார் என்னென்ன விஷயங்களை வாதங்களாக முன்வைக்க போகிறீர்கள் என்பதை தெரிவியுங்கள். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தலாம்” என தலைமை நீதிபதி கூறினார்.
மேலும், `இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றமே விசாரிக்கட்டுமா? அல்லது சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்களுக்கு அனுப்பட்டுமா என்பதையும்... ஒருவேளை உச்ச நீதிமன்றமே விசாரிப்பது என்றால் எந்தெந்த விஷயங்களை விசாரிக்க வேண்டும்’... இந்த இரண்டு விஷயங்கள் அடிப்படையில் மட்டும் வாதங்களை முன் வைக்குமாறு தெரிவித்தனர்.
கபில் சிபல் வாதிட்டது என்ன?
இதனை அடுத்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தன் தரப்பு வாதங்களை முன் வைத்தார். ``அரசியல் சாசன பிரிவு 26, சேவை நோக்கோடும், மதம் சார்ந்தும் நிறுவனங்களை உருவாக்குவதற்கு அனைத்து குடிமக்களுக்கும் அனுமதி வழங்குகிறது. இதன்படி அந்த சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கான சொத்துக்களை வாங்கவும் நிர்வகிககவும் முடியும். ஆனால் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு சட்டம் இந்த சட்டப்பிரிவை அடிப்படையிலேயே மீறுவதாக இருக்கிறது.

மேலும், `மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தின் படி, ஒருவர் ஐந்து வருடங்கள் தொடர்ந்து இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவராக இருந்தால் மட்டும்தான் அவரால் வக்புக்கு சொத்துக்களை கொடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குடிமகன் எந்த மதத்தை பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றுவதற்கு இத்தகைய நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என ஒரு அரசு எவ்வாறு சொல்ல முடியும். மேலும் மதம் மாறியவர்களுக்கு இத்தகைய விஷயத்தை பொருத்திப் பார்க்க முடியும் என்று கூட வைத்துக் கொள்ளலாம். ஆனால் பிறப்பிலேயே இஸ்லாமியனாக இருக்கும் ஒருவரிடம் அரசு எவ்வாறு இந்த கேள்வியை கேட்க முடியும்?
மேலும் பிறப்பால் இஸ்லாமியனாக இருக்கும் ஒருவருக்கு அவரது இஸ்லாமிய தனிச்சட்டம் உடனடியாக செயல்பாட்டுக்கு வந்து விடும். அப்படி இருக்கும் பொழுது அதில் அரசு தலையிட எந்த முகாந்திரமும் இல்லை” என விரிவான வாதங்களை முன் வைத்தார் கபில் சிபல்.
``ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்றும் எனக்கும், எனது வாரிசுரிமை எப்படி இருக்க வேண்டும் என்பதை அரசு எப்படி நிர்ணயிக்க முடியும்?” என கபில் சிபல் கேள்வி எழுப்பிய போது, குறிப்பிட்ட நீதிபதிகள்... ``ஆனால் இந்து மதத்தில் கூட வாரிசுரிமை விவகாரத்தில் நாடாளுமன்றம் சட்டம் இயற்றி இருக்கிறது. இஸ்லாமிய சட்டத்திலும் கூட இதற்காக நாடாளுமன்றம் சட்டங்களை கொண்டு வந்திருக்கிறது” என கேள்வி எழுப்பினார்.
``அது சரியானது தான். ஆனால் இஸ்லாமிய மதத்தை பொறுத்தவரை, ஒரு இஸ்லாமியர் இறந்ததற்குப் பின்பு தான் அவரது சொத்துரிமை நிர்ணயிக்கப்படும். ஆனால் தற்போதைய புதிய சட்டத்தில், அவர் உயிருடன் இருக்கும்போதே சொத்துரிமை வகைப்படுத்தப்படுகிறது. அதனால் தான் இதை எதிர்க்கிறோம்” என பதில் அளித்தார்.
தனக்கு எதிரான வழக்கை தானே விசாரிப்பதற்கு சமம்!
``ஒரு சொத்து வக்ப் சொத்தா இல்லையா என்பதை உறுதிப்படுத்தும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு இருப்பதாக புதிய சட்டம் சொல்கிறது. மாவட்ட ஆட்சியர் என்பவர் அரசால் நியமிக்கப்படுபவர் தான். இது ஒரு நீதிபதி தனக்கு எதிரான வழக்கை தானே விசாரிப்பதற்கு சமமானது” என கபில் சிபல் வாதங்களை முன்வைத்தார்.
``புராதான மசூதிகள் மற்றும் இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட மசூதிகள் உள்ளிட்ட இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் எதுவும் இந்த புதிய சட்டத்தால் எந்த பாதிப்புக்கும் உள்ளாகாது. ஏனென்றால் அவை ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட இடங்கள்” என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவராகவே குறிப்பிட்டு விளக்கங்களை அளித்தார்.
அதேபோல, ``புதிய சட்டத்தின் கீழ் அமைக்கப்பட உள்ள வக்பு வாரியங்கள் மற்றும் ஆலயங்களில் இந்துக்களும் பங்கெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது இது முற்றிலும் சட்டவிரோதமாகும்” என கபில் சிபில் தெரிவித்த போது குறிப்பிட்ட நீதிபதிகள், ``அரசியல் சாசனப் பிரிவு 26 மதம் சார்ந்த நிறுவனங்களை நிர்வகிப்பதை தான் தெளிவுப்படுத்துகிறது. தவிர மத வழிபாட்டு முறைகளை அல்ல என்பதை மனதில் வைத்துக்கொண்டு வாதங்களை முன் வையுங்கள்” என தெரிவித்தனர்.

`போலிகளை தவிர்க்க உதவும் தானே?’
``வக்பு பத்திரம் கட்டாயம் என புதிய சட்டம் கூறுகிறது. அது எப்படி சாத்தியமாகும்?” என கபில் சிபல் சொன்னபோது குறிப்பிட்ட நீதிபதிகள், ``அதில் என்ன பிரச்னை இருக்கப்போகிறது? பத்திரம் இருந்தால் அது போலிகளை தவிர்க்க உதவும் தானே?” என கேட்டனர். அதற்கு பதில் அளித்த கபில் சிபல், ``அது அவ்வளவு சுலபமானது கிடையாது. 300 ஆண்டுகளுக்கு முன்பான ஒரு வக்பு சொத்திற்கு தற்போது பத்திரம் கேட்டார்கள் என்றால் அதை எங்கே இருந்து எடுத்து தர முடியும்?” என கூறினார்.
.....
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது... அதன் விவரங்கள் விரைவில் இங்கே பதியப்படும்!