எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 500, இளைஞர்களுக்கு ரூ. 5000: பாமக நிழல் பட்ஜெட்!
நான் இசை தெய்வமல்ல, சாதாரண மனிதன்தான்: இளையராஜா
ரசிகர்கள் என்னை இசை தெய்வம் என அழைக்கின்றனர், ஆனால் நான் சாதாரண மனிதன்தான் என்று இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உங்களின் ஆதரவு, வரவேற்புடன் சேர்த்து எனது வெற்றிக்கு இறைவன் அருள்புரிந்தான். முறையாக ஒத்திகை பார்த்து பின்னர் சிம்ஃபனி இசையை அரங்கேற்றினேன். ஒவ்வொரு தருணத்திலும் ரசிகர்கள் கைதட்டியதால் இசை கோர்ப்பாளரே ஆச்சரியமடைந்தார். தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள நிகழ்ச்சி.
அரசு மரியாதையுடன் முதல்வர் என்னை வரவேற்றது மனம் நெகிழச் செய்தது. சிம்ஃபனியின் இரண்டாவது பிரிவில் எனது பாடல்களையும் வாசித்து, அதில் நானும் பாடினேன். எனது சிம்ஃபனி இசை துபை, பாரிஸ் உள்ளிட்ட 13 நாடுகளில் நடக்கவுள்ளது. ரசிகர்கள் என்னை இசை தெய்வம் என அழைக்கின்றனர். நான் சாதாரண மனிதன்தான். பண்ணைபுரத்தில் இருந்து இன்றுவரை எனது கால்களில் நடந்து, எனது கால்களில்தான் நான் நிற்கிறேன்.
82 வயது ஆகிவிட்டதே என நினைக்க வேண்டாம், இனிமேல்தான் ஆரம்பிக்கப் போகிறேன். இவ்வாறு அவர் கூறினார். லண்டனில் தனது முதல் சிம்ஃபனி அரங்கேற்றத்துக்பின் திங்கள்கிழமை சென்னை திரும்பிய இசைஞானி இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இளையராஜாவை தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார். பாஜக சார்பில் கரு.நாகராஜன், விசிக சார்பில் வன்னியரசு உள்ளிட்டோர் இளையராஜாவை வரவேற்றனர்.
இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வரவேற்பு
அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, திரைத்துறையினரும், ரசிகர்களும் இளையராஜாவுக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி இந்திய நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளார் இளையராஜா. முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் அவரை வரவேற்க வந்திருக்கிறேன். மிகப் பெரிய உலக சாதனையை நிகழ்த்தி தாய் மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார் இளையராஜா என்றார்.
உலகின் மிகச் சிறந்த பில்ஹார்மோனிக் இசைக் குழுவுடன் இணைந்து இளையராஜா சிம்ஃபனியை அரங்கேற்றினார். இதன்மூலம் சிம்ஃபனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார் இளையராஜா.