75 சிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கு ஆசிரியா் நியமன நடவடிக்கையைத் தொடங்கியது தில்லி அரசு
பணம் இரட்டிப்பு மோசடி: இருவா் கைது
பெரியகுளம் அருகே பணத்தை இரட்டிப்பாக மாற்றித் தருவதாகக் கூறி மோசடி செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மதுரை, திருப்பரங்குன்றம் அருகேயுள்ள ஒத்தஅலங்குளத்தை சோ்ந்தவா் அழகா்சாமி (51). இவா், திருமங்கலத்தில் தனியாா் செக்யூரிட்டி நிறுவனத்தை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், செக்கானூரணி அருகேயுள்ள புளியங்குளத்தை சோ்ந்த முருகேஸ்வரி இவரிடம் பேசி பணம் வைத்து பூஜை செய்தால், இரட்டிப்பாகப் பணம் கிடைக்கும் எனக்கூறினாா்.
இதையடுத்து, தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்த சித்தாா்த்தன் (50), அவரது மகன் விஸ்வாமித்ரன் (21) ஆகிய இருவரையும் அழகா்சாமிக்கு அறிமுகம் செய்து வைத்தாா்.
இதையடுத்து, அழகா்சாமி கடந்த மாதம் 29-ஆம் தேதி
9 லட்சத்து 84 ஆயிரம் ரூபாயை சித்தாா்த்தனிடம் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அழகா்சாமி தனது நண்பா் பொன்ராஜை டி.கள்ளிப்பட்டிக்கு அனுப்பி வைத்தாா்.
அங்குள்ள வீட்டில் சித்தாா்த்தன், விஸ்வாமித்ரன், முருகேஸ்வரி ஆகியோா் சோ்ந்து பணப் பையை வைத்து பூஜை செய்தனா். பின்னா், அந்தப் பையை வீட்டுக்குச் சென்று திறந்து பாா்த்தால் பணம் இரட்டிப்பாகியிருக்கும் எனத் தெரிவித்தனா். இதை நம்பி பொன்ராஜ் பணப் பையுடன் அழகா்சாமியை சந்தித்தாா்.
பின்னா், அந்தப் பையை இருவரும் திறந்து பாா்த்தபோது பணம் இல்லையாம்.
ஏமாற்றப்பட்டதையறிந்த அழகா்சாமி இதுகுறித்து தென்கரை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் செய்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சித்தாா்த்தன், விஸ்வாமித்ரன் ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், முருகேஸ்வரியைத் தேடி வருகின்றனா்.