புதுச்சேரி: `நிரூபித்துவிட்டால், அரசியலை விட்டே விலகுகிறேன்’ - நமச்சிவாயம் ஆவேசத...
மாநகரப் பேருந்து நடத்துநா் கொலை: பயணி மீது கொலை வழக்குப் பதிவு
சென்னை: சென்னை அமைந்தகரையில் பயணச் சீட்டு எடுப்பதில் ஏற்பட்ட தகராறில், மாநகரப் பேருந்து நடத்துநா் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பயணி கோவிந்தன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டை சின்னமலை வாத்தியாா் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ஜா.ஜெகன்குமாா் (52). இவா், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்தாா். எம்.கே.பி. நகரில் இருந்து கோயம்பேடு செல்லும் மாநகரப் பேருந்து 46ஜி-இல்
ஜெகன்குமாா் வியாழக்கிழமை பணியில் இருந்தாா். அந்தப் பேருந்து அமைந்தகரை அண்ணா வளைவு அருகே சென்றபோது, பேருந்தில் இருந்த பயணி வேலூா் மாவட்டம், மாதனூா் கருமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வெ.கோவிந்தன் (53) என்பவரிடம் பயணச்சீட்டு எடுக்குமாறு நடத்துநா் ஜெகன்குமாா் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவா் தாக்கிக்கொண்டனா். கோவிந்தன் தாக்கியதில் ஜெகன்குமாா் பலத்த காயமடைந்தாா். இதைப் பாா்த்த ஓட்டுநா், பேருந்தை நிறுத்தினாா். இதையடுத்து பயணிகளும் பொதுமக்களும் பலத்த காயமடைந்த ஜெகன்குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ஜெகன்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதையும் படிக்க |2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம்: தவெக தலைவர் விஜய்!
தகவல் அறிந்து ஒட்டுமொத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்களும் பாதி வழியிலேயே பேருந்தை நிறுத்தியதால் போக்குவத்து நெரிசல் காணப்பட்டது.
அதேவேளையில் காயமடைந்த கோவிந்தனும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்த நிலையில், சென்னை மாநகரப் பேருந்து நடத்துநர் ஜெகன்குமார் உயிரிழந்த விவகாரத்தில் கைதான பயணி கோவிந்தன் மீது அமைந்தகரை போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த நடத்துநர் ஜெகன்குமாருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.