நெப்போலியன் குடும்பத்தின் 900 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு! - சினிமாவை மிஞ்சி...
'மீண்டும் திமுக ஆட்சிக்கு வாய்ப்பு' - ஓபிஎஸ்-ஸின் கருத்து வியூகமா? குழப்பமா?
அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, தன் அரசியல் பயணத்தை 'அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு' மூலம் தனித்துத் தொடங்கினார், ஓ.பி.எஸ். பா.ஜ.க தலைமையிலான தே.ஜ கூட்டணியில் இணைந்தார். எனினும், கூட்டணியில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற அதிருப்தி ஓ.பி.எஸ்-ஸிடம் நீண்ட காலமாக இருந்துவந்தது. பா.ஜ.க-வின் உயர்மட்ட தலைவர்களைச் சந்திக்க அவர் மேற்கொண்ட பல முயற்சிகளும் கைகூடவில்லை.
சமீபத்தில், பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது, அவரைச் சந்திக்க ஓ.பி.எஸ் வெளிப்படையாக கடிதம் எழுதியும் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த அவமதிப்புகளுக்குப் பிறகு, தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்திய ஓ.பி.எஸ், தே.ஜ கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தி.மு.க, விஜய்... யார் பக்கம் ஓ.பி.எஸ்?
கூட்டணியிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவர் இரண்டு முறை சந்தித்தது, பல ஊகங்களுக்கு வழிவகுத்தது. ஓ.பி.எஸ் தி.மு.க கூட்டணிக்குச் செல்லக்கூடும் என்று ஒரு தரப்பினரும், நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுகளுடன் அவர் இணையக்கூடும் என்று மற்றொரு தரப்பினரும் பேசத் தொடங்கினர்.
இதற்கிடையில், சென்னையில் மீண்டும் தனது ஆதரவாளர்களுடன் அவர் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, பண்ருட்டி ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்பு, எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரித்தது.
"நம்முடைய அரசியல் பாதை மிகவும் தெளிவாக உள்ளது. இதன் முதல் படியாக, லட்சக்கணக்கான மக்களை ஒன்றிணைத்து, ஒரு பிரமாண்டமான மாநாட்டை மூதூர் மதுரையில் வரும் செப்டம்பர் 4-ம் தேதி நடத்த முடிவு செய்துள்ளோம். இது வெறும் கூட்டமல்ல; கொள்கையை வகுத்து, லட்சிய முழக்கத்தை நாட்டுக்கு அறிமுகப்படுத்தும் மாநாடாக அமையும்" என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில், 2026 சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு வழிகாட்டும் வகையில், அரசியல் முடிவும், தெளிவான தீர்மானமும், கொள்கைப் பிரகடனமும் இருக்கும் என்றும், ஓ.பன்னீர்செல்வம் அன்றைய தினம் லட்சிய உரையாற்ற இருக்கிறார் என்றும் பேசி எதிர்பார்ப்பை எகிறவைத்தார். ஆனால், அறிவிக்கப்பட்ட அந்த மாநாடு நடைபெறவில்லை.

'தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது' - ஓ.பி.எஸ்
மாநாடு குறித்த முடிவுகள் தெளிவாகாத நிலையில், சிவகங்கையில் செய்தியாளர்களிடம் ஓ.பி.எஸ் தெரிவித்த கருத்துக்குப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறார், ஓ.பி.எஸ். முதலில் விஜய்யுடன் கூட்டணி அமைப்பது பற்றிக் கேட்டபோது, "எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம். இந்தத் தேர்தலுக்குள் பல புயல், சூறாவளி வீசக்கூடும்" என்று பதிலளித்தார்.

பிறகு, "அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிதறிக் கிடப்பதால் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாக மக்கள் பேசி வருகின்றனர். எம்.ஜி.ஆர் தொண்டர்களுக்காக உருவாக்கிய அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளரை தொண்டர்கள் மூலம் தேர்வு செய்யும் விதிமுறை தற்போது மாற்றப்பட்டுவிட்டது. அதை மீண்டும் நிலைநாட்டவே நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறேன்" எனக் கூறினார்.
ஓ.பி.எஸ்-ஸுக்குப் போக்கிடம் இல்லை!
இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், "ஓ.பி.எஸ், அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளராகவும், துணை முதல்வராகவும் இருந்தவர். இப்போது தனக்குத் தலைமை பதவி வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்.
இந்தச் சூழலில், 'அ.தி.மு.க கூட்டணி வலிமையாக இல்லை. எனவே தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது' என்று ஓ.பி.எஸ் சொல்வது மிகவும் தவறு.
நடுநிலையாளர்கள் அல்லது தி.மு.க-வினர் இவ்வாறு பேசலாம். ஆளும் கட்சி நல்ல திட்டம் அறிவித்தால்கூட, எதிர்க்கட்சி அதில் குறையிருக்கிறது என்று விமர்சிப்பதுதான் அரசியல். அரசியல்வாதியாக அவருக்குப் போக்கிடம் இல்லாத சூழல் உள்ளது.
அதேநேரத்தில், எடப்பாடியை வீழ்த்த வேண்டும் என ஓ.பி.எஸ் நினைக்கிறார். அதற்காக ஓ.பி.எஸ்-ஸும், டி.டி.வி தினகரனும் இணைந்து தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கிறது. அதன் ஒருபகுதியாகக் கூட அவர் இப்படிப் பேசியிருக்கலாம். ஆனாலும் அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.
ஓ.பி.எஸ்-ஸின் பேச்சு, நடவடிக்கை, அறிவித்து நடைபெறாத மாநாடு, தற்போதைய பேட்டியென ஒவ்வொரு நகர்வும் அவரது குழப்பமான அரசியல் வியூகத்தை தெளிவாகப் பிரதிபலிக்கின்றன!




















