Love Marriage Review: காமெடிக்கேற்ற களம், குடும்பங்களின் சங்கமம் - ஈர்க்கிறதா இந...
மேற்கு வங்கம்: மீண்டும் ஒரு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை?
மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் தெற்கு கொல்கத்தாவில் காஸ்பா பகுதியில் மாநில அரசு நடத்தும் சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவரை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வு தொடர்பாக படிவங்களைச் சமர்ப்பிக்க, புதன்கிழமையில் கல்லூரி வந்த 24 வயதான மாணவியை, அதே கல்லூரியில் படிக்கும் 2 மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் ஒருவரும் சேர்ந்து கல்லூரி பாதுகாப்பு காவலரின் அறைக்குள் மாணவியை அடைத்து, இரவு 7.30 முதல் 10.50 மணியளவில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து, கஸ்பா காவல் நிலையத்தில் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், ஜயிப் அகமது (19), பிரமித் முகர்ஜி (20) மற்றும் முன்னாள் மாணவரும் கல்லூரியில் திரிணமூல் காங்கிரஸின் மாணவர் பிரிவின் முன்னாள் தலைவருமான மோனோஜித் மிஸ்ரா (31) ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் அலிபூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய காவல்துறையினர், 14 நாள்கள் காவலில் வைக்கக்கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால், அடுத்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) வரை மட்டுமே காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்தாண்டு, ஆகஸ்ட் மாதத்தில் ஆர்ஜி மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மேற்கு வங்கம் மட்டுமின்றி, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.