யுபிஎஸ்சி தேர்வு: தமிழகத்தில் 57 பேர் தேர்வு; சிவச்சந்திரன் முதலிடம்
6-வது நாளாக உயர்ந்து முடிந்தது சென்செக்ஸ், நிஃப்டி!
மும்பை: இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி டாப் 50 பங்குகள் கொண்ட குறியீடுகள் தொடர்ந்து ஆறாவது நாளாக உயர்ந்து முடிந்தது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 415.8 புள்ளிகள் உயர்ந்து 79,824.30 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 187.09 புள்ளிகள் உயர்ந்து 79,595.59 ஆகவும், நிஃப்டி 41.70 புள்ளிகள் உயர்ந்து 24,167.25 ஆகவும் நிலைபெற்றது. சற்றே குறைவான லாபங்கள் இருந்தபோதிலும் இன்று 2,389 பங்குகள் உயர்ந்தும் 1,453 பங்குகள் சரிந்தும் 137 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிந்தது.
இன்றைய வர்த்தகம் ஏற்ற இறக்கமில்லாமல் இருந்த நிலையில், நிஃப்டி மிட்கேப் 100 மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடுகள் தலா 0.8 சதவிகிதம் உயர்ந்து முடிந்தது.
சென்செக்ஸ் பங்குகளில் ஐடிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், மஹிந்திரா & மஹிந்திரா, ஹெச்டிஎஃப்சி வங்கி, எடர்னல், கோடக் மஹிந்திரா வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்த நிலையில் இண்டஸ்இண்ட் வங்கி, பவர் கிரிட், பார்தி ஏர்டெல், இன்போசிஸ், பஜாஜ் பின்சர்வ் உள்ளிட்ட பங்குகள் விலை சரிந்தது.
அமெரிக்க சந்தைகளில் உள்ள சிக்கல்களால் இந்திய சந்தைகள் இனி பெரும்பாலும் பாதிக்கப்படாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சிறிய பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் இனி ஆர்வம் காட்டலாம் என எச்.டி.எஃப்.சி. செக்யூரிட்டீஸ் நிறுவனம் கூறியுள்ளது.
இரண்டாவதாக, தணிக்கை நடத்த எர்னஸ்ட் & யங் நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள் 6 சதவிகிதம் வரை சரிந்து முடிந்தது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் பங்கு ரூ. 15 லட்சம் கோடி என்ற மைல்கல்லை எட்டியது, இதன் மூலம் இந்த அளவை எட்டிய மூன்றாவது இந்திய நிறுவனம் என்ற பெருமையை இந்த வங்கி பெற்றது. இதற்கு முன்பு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியுள்ளன. மார்ச் மாதத்திற்குப் பிறகு ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றன.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.1,970.17 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
ஆசிய சந்தைகளில் ஷாங்காய் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் ஆகியவை உயர்ந்து முடிந்தது. தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் டோக்கியோவின் நிக்கேய் - 225 ஆகியவை சரிந்து முடிந்தது. ஐரோப்பிய சந்தைகள் கலவையான முறையில் வர்த்தகமானது.
அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) வெகுவாக சரிந்து முடிந்தது. நாஸ்டாக் காம்போசிட் 2.55 சதவிகிதமும், டவ் ஜோன்ஸ் தொழில் துறை சராசரி 2.48 சதவிகிதமும், எஸ் அண்ட் பி-500 2.36 சதவிகிதமும் சரிந்து முடிந்தது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.61 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 67.33 டாலராக உள்ளது.
இதையும் படிக்க: பேங்க் ஆஃப் பரோடாவில் தனது மூலதனத்தை 2% அதிகரித்த எல்ஐசி!