22 நாள்கள் பேட்டரி தாங்கும் திறன்! விவோவின் புதிய ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்!
விவோ நிறுவனம் சிறந்த பேட்டரி திறனுடன் புதிய ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது. ரெட்மி நிறுவனம் நேற்று புதிய ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகம் செய்த நிலையில், இன்று (ஏப். 22) விவோ நிறுவனம் அதிக நாள்கள் பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்சை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விவோ நிறுவனம் ஸ்மார்ட்போன்களை மட்டுமின்றி, ஸ்மார்ட் வாட்ச்களையும் தயாரித்து வருகிறது.
அந்தவகையில் இன்று 1.43 அங்குல திரையுடன் கூடிய புதிய வாட்ச் -5ஐ அறிமுகம் செய்துள்ளது. விற்பனையில் தனித்துவமாக விளங்கும் வகையில், 22 நாள்கள் பேட்டரி திறன் கொண்டது.
இதையும் படிக்க | ஓப்போவுக்கு போட்டியாக விவோ அறிமுகப்படுத்திய ஸ்மார்ட்போன்!
சிறப்புகள் என்னென்ன?
விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இதே நாளில், விவோவில் எக்ஸ் 200 அல்ட்ரா, எக்ஸ் 200 அல்ட்ரா எஸ் என்ற இரு ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஸ்மார்ட் வாட்ச், 1.43 அங்குல (3.63 செ.மீ.) திரை கொண்டது. திரையை அணைக்காமல், வெளிச்சத்துடன் வைத்திருந்தால்கூட 22 நாள்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தலாம்.
எண்ணற்ற செய்யறிவு தொழில்நுட்ப அம்சங்களை உள்ளடக்கியது. உடலில் ரத்த அழுத்தத்தை 30 விநாடிகளில் கணக்கிட்டு கூறும் வகையில் புளூ ஓஎஸ் 2.0. கொண்டுள்ளது. இதேபோன்று தூக்க நிலை மற்றும் இதயத் துடிப்புகளையும் கணக்கிடும் அம்சம் கொண்டது.
விலை எவ்வளவு?
புதிய ஸ்மாட் வாட்ச்சானது சிலிகானால் ஆன பட்டையுடன் வருகிறது. இதனால் இதன் விலை ரூ. 9300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே அம்சத்தில் தோல் பட்டையுடன் வேண்டுமானால் ரூ. 11,600 செலுத்த வேண்டும்.
இரு வேறு வண்ணங்களைக் கொண்டுள்ளது. தற்போது முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் விற்பனை ஏப். 29 முதல் தொடங்கும்.
தற்போது முதல்கட்டமாக சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்திய சந்தைக்கு கொண்டுவரப்படவுள்ளது.
இதையும் படிக்க | ரெட்மியின் புதிய ஸ்மார்ட் வாட்ச்! சிறப்புகள் என்னென்ன?