இஸ்ரேல் தாக்குல்: காஸாவில் 17 பேர் பலி!
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் என அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
மேலும், இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் தரைமட்டமான கட்டட இடிபாடுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த புல்டோசர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் - பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த 18 மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் காஸாவின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்துள்ளன.
கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கவோ, இடிபாடுகளை அகற்றி சரி செய்யவோ போதிய கனரக வாகனங்களின்றி காஸா நிர்வாகம் தவித்து வருகிறது. மனிதாபிமான உதவிகளைச் செய்துவரும் நட்பு நாடுகளின் உதவியால் சில கனரக வாகனங்கள் இடிபாடுகளையும் கட்டடக் குவியல்களையும் அகற்றி மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
இதனிடையே இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதல் மூலம் 14 உயிர்கள் பறித்ததுடன், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த 9 கனரக வாகனங்களையும் அழித்துள்ளது.
இது குறித்து வடக்கு காஸாவின் ஜபாலியா நிர்வாகம் கூறியதாவது, ஜனவரி மாதத்திலிருந்து உதவிக்கரம் நீட்டிவரும் எகிப்து, கத்தார் நாடுகள் கொடுத்த புல்டோசர்கள் வாகனங்கள் நிறுத்தத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இஸ்ரேல் அதனைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
போர் நிறுத்தத்தை கடந்த மார்ச் மாதம் இஸ்ரேல் முறித்துக் கொண்டது. தற்போது காஸாவிலுள்ள பாலஸ்தீனர்களைக் குறிவைத்து மீண்டும் தாக்குதலைத் தொடங்கி முன்னேறி வருகிறது. இதனால், உணவு, மருந்துப் பொருள்கள், எரிபொருள் என அனைத்துவிதமான இறக்குமதிகளும் சீர்குலைந்துள்ளன.
தண்ணீர் தொட்டிகள் மற்றும் செல்போன் டவர்களைக் குறிவைத்தும் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிக்க:ஜப்பானில் மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர்!