ஜம்மு - காஷ்மீர் தாக்குதல்: முதல்வர் கண்டனம்
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,
’’ஜம்மு - காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது. கடும் கண்டனத்துக்குரியது. அப்பாவி சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடந்த தாக்குதலில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அடங்குவார்கள் என்ற செய்தி வருத்தமளிக்கிறது.
ஜம்மு - காஷ்மீர் அதிகாரிகளுடன் இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய உதவிகளைச் செய்ய தமிழகம் சார்பில் தில்லியில் உள்ள ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன்’’ எனப் பதிவிட்டுள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியிலுள்ள சுற்றுலா தளத்திற்கு பயணிகள் இன்று (ஏப். 22) வழக்கம்போல் சென்றுள்ளனர். அங்கு எதிர்பாராத விதமாக முகத்தை மறைத்துக்கொண்டிருந்த நபர்கள், பயணிகளை நோக்கி திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சௌதி அரேபியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரிடம் பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு தேவையான உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உடன் அமிதா புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிக்க | குற்றவாளிகள் தப்பிக்க முடியாது: பிரதமர் கண்டனம்!