BRICS: ``உலக அமைதிக்கு இந்திய - சீன உறவு அவசியம்'' பிரதமர் மோடி பேச்சு.. சீன அதிபர் ஜின் பிங் ஆதரவு!
கிட்டதட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு, பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின் பிங்கின் திட்டமிடப்பட்ட சந்திப்பு நேற்று நிகழ்ந்துள்ளது.
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கடந்த செவ்வாய்கிழமை, பிரதமர் மோடி ரஷ்யாவிற்கு சென்றார். அவர் ரஷ்யாவிற்கு சென்ற முதல் நாளிலேயே மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் சந்தித்துக்கொண்டனர். அப்போது, அவர்களுக்கு இடையே சமூகமான மற்றும் நட்பார்ந்த பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த நிலையில், பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின் பிங்கும் சந்தித்து பேசிக்கொள்வார்கள் என்று இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருந்தார். இந்த சந்திப்பு இந்தியா, சீனாவில் மட்டுமல்லாமல், உலகளவில் கவனிக்கப்பட்டது.
லடாக் எல்லை பிரச்னைக்கு பிறகு இரண்டு அதிபர்களும் திட்டமிட்டு சந்திப்பது இதுவே முதல்முறை என்பது தான் இந்த உலகளவிலான கவனத்திற்கு காரணம்.
கடந்த 2020-ம் ஆண்டு, கிழக்கு லடாக் எல்லையில் இந்திய - சீன நாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் நடந்தது. அதன்பிறகு, பேச்சுவார்த்தைகள் நடந்தும் எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லை. ஆனால், கடந்த திங்கள் கிழமை, இந்த எல்லை பிரச்னை சம்பந்தமாக, இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் நீட்சியே, மோடி - ஜின் பிங் சந்திப்பு.
இந்த ஐந்து ஆண்டுகளில், மோடி - ஜின் பிங் சில இடங்களில் சந்தித்துக்கொண்டாலும், அவர்களுக்கு இடையே நடந்த பேச்சுகள் எதிர்பாரததாகவே இருந்தது...ஓரிரு வார்த்தைகளுடனே நிறைவுற்றது. ஆனால், நேற்று நடந்த இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டதாகும்.
மோடி - ஜின் பிங் சந்திப்பு குறித்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஜின் பிங்கை சந்தித்தேன். இந்திய - சீன உறவு இருநாட்டு மக்களுக்கும், பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் நிலைதன்மைக்கு முக்கியமானது ஆகும்.
பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் உணர்திறன் இருநாடுகளின் உறவையும் வழிநடத்தி செல்லும்" என்று பதிவிட்டுள்ளார்.
'இந்திய - சீனாவிற்கு இடையே உள்ள வித்தியாசங்களை கலைந்து, தகவல் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும். இரு நாடுகளும் சர்வதேச பொறுப்புகளை ஏற்று, வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு உதாரணமாக விளங்க வேண்டும்' என்று சீன அதிபர், பிரதமர் மோடியுடன் பேசியதாக சீன ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பு குறித்து இந்திய வெளியுறவுத் துறை விக்ரம் மிஸ்ரி கூறுகையில், "பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின் பிங் இருவரும் சர்வதேச பிரச்னைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாத்தித்தனர். இயல்பான உறவுக்கு எல்லையில் அமைதி அவசியம். மேலும் இரு நாடுகளுக்கும் இடையே எல்லை ஒப்பந்தம் கையெழுத்தானது வரவேற்கத்தக்கது. மீண்டும் இருநாட்டு எல்லை அதிகாரிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை தொடர வேண்டும். மேலும் இனி இரு நாடுகளும் நெருக்கமான தகவல் தொடர்பில் இருக்க சம்மதம் என்று பேசிக்கொண்டனர்" என்று தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb