வேலூர்: 92 அடி உயர தீர்த்தகிரி முருகனுக்கு மகா கும்பாபிஷேகம் - மலை மீது அதிர்ந்த...
Doctor Vikatan: குறட்டை பிரச்னைக்கு சிகிச்சை தேவையா.. அதை நிரந்தரமாக குணப்படுத்த முடியுமா?
Doctor Vikatan: எனக்கு 50 வயதாகிறது. தினமும் இரவில் தூங்கும்போது அதிக குறட்டை விடுவதாக வீட்டில் இருப்பவர்கள் சொல்கிறார்கள். என்னால் அதை உணர முடியவில்லை. குறட்டை பிரச்னைக்கு சிகிச்சை எல்லாம் கிடையாது என்கிறார்கள் சிலர். இதற்கு சிகிச்சை இருக்கிறதா, இதிலிருந்து நிரந்தரமாக மீள முடியுமா?
பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதைமாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்.
குறட்டை பல காரணங்களால் வரலாம். தொண்டைக்கு மேல், சுவாசப்பாதையில் ஏதேனும் தடை ஏற்பட்டாலும் குறட்டை வரும். அதே போல தொண்டைக்குக் கீழ், சுவாசப்பாதையில் ஏதேனும் தடை ஏற்பட்டாலும் குறட்டை வரும். உடல் பருமன் காரணமாகவும் குறட்டை வரலாம்.
மூக்கில் சதை வளர்ச்சி இருப்பதாகச் சிலர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதை 'டீவியேட்டடு நேசல் செப்டம்' (deviated nasal septum) என்று சொல்வோம். இதனாலும் குறட்டை வரலாம். டான்சில்ஸ் பிரச்னையும் இதற்கொரு காரணம். அசிடிட்டி பிரச்னையின் காரணமாகவோ, அதிகம் மது அருந்துவதாலோ சிலருக்கு குரல் நாண் ( Vocal Cord) வீங்கியிருக்கும். இவர்களுக்கு குரல் மாறும், குறட்டை அதிகமிருக்கும். உடல்பருமனால் வரும் குறட்டை சற்றே சீரியஸானது. அதாவது வயிற்றுக்குள் கொழுப்பு அதிகமிருக்கும்.
சிலருக்கு வயிற்றின் சுற்றளவு மெள்ள மெள்ள அதிகரித்துக்கொண்டே வரும். அது நுரையீரலை சுருக்க ஆரம்பிக்கும். நுரையீரலின் கொள்ளவு குறையும்போது, நம்மை அறியாமல் வாயைத் திறந்து மூச்சு விட ஆரம்பிப்போம். அப்போது நாக்கு உள்வாங்கி, தொண்டையை அடைக்கும். மூச்சுக் காற்றானது அதைத் தாண்டி, மேலும் கீழும் போகும்போது குறட்டையாக வெளியே வரும்.

குறட்டை பிரச்னை உள்ளவர்கள் ஆழ்ந்த உறக்கத்துக்குள் போக மாட்டார்கள். அடிக்கடி தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்வார்கள். மூளைக்குப் போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும். மறுநாள் அதிக களைப்புடன் உணர்வார்கள். உட்கார்ந்த நிலையிலேயே தூங்குவார்கள்.
குறட்டை பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரை அணுகி, 'ஸ்லீப் ஸ்டடி' (sleep study) என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அதில் அவர்களுக்கு ஸ்லீப் ஆப்னியா என்ற பாதிப்பு இருக்கிறதா, எந்த நிலையில் இருக்கிறது என்று பார்ப்பார்கள். தேவைப்பட்டால் நுரையீரல் மருத்துவரைப் பார்க்கச் சொல்வார்கள். எடை அதிகமிருந்தால் எடையைக் குறைக்க அறிவுறுத்துவார்கள். மூக்கில் சதை வளர்ந்திருந்தால் இ.என்.டி மருத்துவரை அணுகச் சொல்வார்கள்.
குறட்டை பிரச்னையை கவனிக்காமல் விட்டால் நுரையீரல் சுருங்கிக் கொண்டே போகும். அவர்களுக்கு ஐசியூவில் அனுமதித்து சிகிச்சை கொடுக்க வேண்டியிருக்கும். சுய நினைவை இழக்க நேரிடலாம்.
சரியான மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்தால் குறட்டை பிரச்னையை 100 சதவிகிதம் குணப்படுத்திவிடலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.