'I am Alright; சென்னை போகிறேன், அங்கு தான்..!' - குருமூர்த்தி சந்திப்பு குறித்து ராமதாஸ் பேசியதென்ன?
பாமக-வில் தந்தை - மகன் விரிசல் முற்றிய நிலையில், கடந்த வியாழக்கிழமை (ஜூன் 5) காலை பாமக தலைவர் அன்புமணி, பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்க தைலாபுரம் வந்தார். அன்புமணி வந்து சென்றதுமே, ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் அதிமுக முன்னாள் நிர்வாகி சைதை துரைசாமி தைலாபுரத்தில் ராமதாஸை சந்தித்தனர்.
தந்தை உடனான சந்திப்பு குறித்து அன்புமணி எதுவுமே தெரிவிக்கவில்லை. ஆனால், 'நட்பு ரீதியிலான சந்திப்பு மட்டுமே' என்று ராமதாஸ் உடனான சந்திப்பு குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி கூறினார்.

இந்த நிலையில் இன்று சென்னை புறப்படும் போது செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், "நான் சென்னைக்கு செல்கிறேன். அங்கு தான் எனது மகள்கள், குழந்தைகள், கொள்ளுப்பேரன் அனைவரும் இருக்கிறார்கள். நான் செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்திக்கிறேன். சென்னைக்கு நான் செக்-அப்பிற்காக செல்லவில்லை. I am Alright" என்று கூறினார்.
குருமூர்த்தி உடனான சந்திப்பு குறித்து கேட்டப்போது, 'பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் குருமூர்த்தியை மிகவும் மதிக்கிறேன். எங்களுடையது நீண்ட கால நட்பு. அதே மாதிரி சைதை துரைசாமி உடனும் 30 ஆண்டுகால நட்பு" என்று பதிலளித்துள்ளார் ராமதாஸ்.
'நான் பாஜகவிற்காக இங்கு வரவில்லை' என்று குருமூர்த்தி கூறிய நிலையில், 'பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது' என்று ஹின்ட் கொடுத்துள்ளாரா ராமதாஸ் என்கிற கேள்வியும் எழுகிறது.!