இந்திய அணி எங்கு தவறு செய்கிறது? பந்துவீச்சு பயிற்சியாளர் பதில்!
lady Justice Statue: `நீதி தேவதை சிலை மாற்றியமைப்பு' - உச்ச நீதிமன்ற பார் அசோசியேசன் எதிர்ப்பது ஏன்?
நீதியை சரிசமமாக வழங்குவதை நீதி தேவதை சிலை குறிக்கிறது. இந்த சிலை நீதிமன்றங்கள், சட்டக் கல்வி நிறுவனங்கள், சட்ட அலுவலகங்களில் நிறுவப்பட்டுள்ளது. அந்த சிலைகளில் கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்டும், இடது கையில் தராசு, வலது கையில் வாளும் இருக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். நீதி நபர்களைப் பார்த்து இல்லாமல், நேர்மையான சிந்தனை மூலம் இருக்க வேண்டும் என்பதற்காகவே கண்கள் கட்டப்பட்டுள்ளது. இடது கையில் இருக்கும் தராசு சமமான நீதி வழங்கப்படும் என்பதை குறிக்கிறது.
குற்றம் செய்தவர்களை தண்டிப்பதற்காக வலது கையில் நீண்ட இருமுனை வாள் இருக்கிறது. மேலும் அந்த வாளின் இருமுனையும் கூர்மையாக இருக்கும். தவறு யார் செய்தாலும் வாள் அவர்கள் பக்கம்தான் திரும்பும் என்பதை குறிக்கிறது. சட்ட சாசன புத்தகத்தின் மேல் இருக்கும் இடது கால் சட்டத்தை தவிர கவனிப்பதற்கு, முக்கியத்துவம் தருவதற்கு வேறெதுவும் இல்லை என்பதை சொல்கிறது. வலது கால் படமெடுத்து வரும் பாம்பின் மீது இருக்கும். இது நீதி வழங்குவதை தடுக்கும் எந்த தீய சக்தியின் பயமுறுத்தல்களும் எடுபடாது என்பதையும் அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துவிட முடியாது என்பதையே குறிக்கிறது.
இந்த சூழலில்தான் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் நீதிபதிகளின் நூலகத்தில் ஆறடி உயரம் கொண்ட நீதி தேவதையின் சிலை திறக்கப்பட்டது. அதில் பழைய சிலையை போல இல்லாமல் புதிய சிலையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக கண்கள் துணியால் மூடப்படவில்லை. ஒரு கையில் தராசும், மறு கையில் வாளுக்கு பதிலாக அரசமைப்பு சட்ட புத்தகமும் இடம்பெற்றுள்ளது. மேலும் தலையில் கிரீடத்துடன் வெள்ளை நிற உடையில் இருப்பது போன்று இந்த புதிய சிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் சார்பில் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தில், "நீதி தேவதையின் சிலை மற்றும் சின்னத்தில் உச்ச நீதிமன்றம் ஒருதலைபட்சமாக செயல்பட்டு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இது உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களின் நிர்வாக குழுவின் கவனத்துக்கு வந்துள்ளது. நீதி நிர்வாகத்தில் சமபங்குதாரர்களாக இருக்கிறோம். ஆனால், இந்த மாற்றங்கள் முன்மொழியப்பட்டபோது எங்களின் கவனத்துக்கு கொண்டுவரப்படவில்லை. மேலும் இந்த மாற்றத்துக்கான பின்னணி என்ன என்பது குறித்தும் தெரியவில்லை. அதபோன்று, நாங்கள் வழக்கறிஞர் சங்கத்துக்காக உணவு விடுதி கட்ட கோரிக்கை விடுத்த இடத்தில் அருங்காட்சியகம் கட்ட எடுத்துள்ள நடவடிக்கைக்கும் எஸ்.சி.பி.ஏ ஒருமனதாக தனது எதிர்ப்பை தெரிவிக்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க வழக்கறிஞரும், செய்தித் தொடர்பாளருமான கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், "நீதி தேவதை சிலை மாற்றியமைக்கப்பட்டிருப்பதில் நியாயம் இல்லை. வாதத்தின் அடிப்படையில்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும். யார் வாதிடுகிறார்கள், யாருக்காக பேசுகிறார்கள், முன்னாள் நிற்பவர்கள் என எதுவும் தெரியக் கூடாது. வாதம் மட்டும்தான் காதில் கேட்க வேண்டும் என்பதுதான் நீதி தேவதை சிலையின் தத்துவம். வாதத்தின் அடிப்படியில் தீர்ப்பு வழங்க வேண்டும். தன்னுடைய மகளே கொலை செய்யப்பட்டாலும் நீதிபதி அதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபித்தால் மட்டுமே தண்டனை வழங்க வேண்டும். ஆனால் இன்று கண்களை திறந்து வைத்திருக்கிறீர்கள். மேலும் இருமுனையும் கூர்மையாக இருக்கும் வாள் யார் தவறு செய்தாலும் அவர்கள் பக்கம்தான் திரும்பும் என்பதை குறிக்கிறது. அதையும் மாற்றியிருக்கிறார்கள். இதன் மூலம் நீதி தேவதைக்கான தத்துவத்தையே உடைத்திருக்கிறார்கள். தற்போது இவ்வாறு மாற்றம் செய்ய வேண்டும் என்பதற்கான தேவை எங்கிருந்து வந்தது?" என்றார்.