திருமணமான பெண் வேறொரு இளைஞருடன் ஒரே வீட்டில் குடித்தனம்: கர்ப்பத்தில் சந்தேகம்; ...
One Day DC: 'என் வாழ்வில் மறக்கமாட்டேன்'- ஒரு நாள் துணை ஆணையராகப் பதவி வகித்த 10-ம் வகுப்பு மாணவி
ஒரு நாள் முதல்வர் பற்றிய கதைகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், 10-ம் வகுப்பு மாணவி ஒரு நாள் துணை ஆணையராக பதவி வகித்த கதையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அப்படியான ஒரு நிகழ்வு ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் மண்டி மாவட்டத்தில் நடந்திருக்கிறது.

ஹிமாசலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள டூன் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார் மாணவி அன்வி. இந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவி அன்வி, அதிக மதிப்பெண்கள் பெற்று ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் நான்காம் இடமும், மண்டி மாவட்டத்தில் முதலாம் இடமும் பிடித்திருக்கிறார்.
அன்வியின் இந்தச் சாதனையை ஊக்குவிக்கும் வகையில், மண்டி மாவட்ட நிர்வாகம் அவருக்கு ஒரு நாள் மண்டி மாவட்டத்தின் துணை ஆணையராக பதவி வகிக்கும் பொறுப்பை வழங்கியிருக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை ஒரு நாள் துணை ஆணையராகப் பதவி வகித்த அன்விக்கு, பல பொறுப்புகள் குறித்து அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
மண்டி மாவட்டத்தின் ஆட்சியரான அபூர்வா தேவ்கன், அன்வியை வரவேற்று, பல்வேறு நிர்வாகச் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். ஒரு நாள் துணை ஆட்சியராகப் பதவி வகித்த அன்வி, முதல் பணியாக நிலநடுக்கப் பயிற்சி ஒத்திகையை ஆய்வு செய்தார்.
அங்கு அவர் அதிகாரிகளுடன் உரையாடி, பேரிடர் மேலாண்மைத் தயார்நிலை குறித்து மதிப்பாய்வு செய்திருக்கிறார். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பல்வேறு பிரிவுகளைப் பார்வையிட்டு, அவற்றின் பங்குகள் மற்றும் செயல்பாடுகளைக் கவனித்திருக்கிறார்.
மேலும், பொது மக்களின் குறைகேள் விசாரணை அமர்வில் பங்கேற்று, புகார்களைக் கேட்டுத், தொடர்புடைய துறைகளுக்கு அவற்றைத் தீர்க்க உத்தரவிட்டிருக்கிறார்.

ஒரு நாள் துணை ஆணையராகப் பதவி வகித்த அன்வி, "இந்த நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள். இன்று நான் ஒரு மாவட்ட ஆட்சியரின் பணிகள், அவரது பொறுப்புகள் மற்றும் நிர்வாகச் செயல்முறைகளை நெருக்கமாக அறிந்துகொண்டேன்," எனக் கூறியிருக்கிறார்.
மண்டி மாவட்டத்தில் பின்பற்றப்படும் இந்த ‘ஒரு நாள் துணை ஆட்சியர்’ முயற்சி குறித்து, அம்மாவட்டத்தின் ஆட்சியரான அபூர்வா தேவ்கன், "இந்த முயற்சி மாணவர்களை ஊக்குவிப்பதற்கும், அவர்களிடம் தலைமைத்துவத் திறன்கள், தன்னம்பிக்கை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்ப்பதற்கும் மண்டி நிர்வாகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்," எனத் தெரிவித்திருக்கிறார்.