தனக்குத் தானே முரண்படும் ரொனால்டோ..! தங்கப் பந்து விருதுக்கான கருத்தால் சர்ச்சை!
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தங்கப் பந்து விருது கருத்துக்கு பிரெஞ்சு கால்பந்து வீரர் ரிபெரி கிண்டலாக எதிர்வினை ஆற்றியது பேசுபொருளாகியுள்ளது.
கால்பந்து உலகில் தங்கப் பந்து விருது (பேலந்தோர்) மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் ரொனால்டோ, “தனிப்பட்ட வீரர்களுக்கான விருதுகள் மதிப்பை இழந்து வருகின்றன. யார் வெற்றி பெறுவார்கள் என நான் கூற முடியாது.
என்னைப் பொறுத்தவரை யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ, சாம்பியன் லீக்கை வெல்கிறார்களோ அவர்களுக்கு தரலாம்” என்றார்.
2013ஆம் ஆண்டு ரொனால்டோ சாம்பியன் லீக்கை வெல்லாமலே பேலந்தோர் விருது பெற்றார். அந்த சீசனில் சாம்பியன்ஸ் லீக் உள்பட மூன்று கோப்பைகளையும் வென்ற அணியில் ரிபெரி சிறப்பாக விளையாடி இருந்தார்.
பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த ஃபிராங்க் ஹென்றி பியர் ரிபெரி (42) தனது சமூக வலைதள பக்கத்தில், “அதனால், பேலந்தோர் விருது வாங்க சாம்பியன் லீக்கை வெல்ல வேண்டும்?” எனப் பதிவிட்டு அதனுடன் சிரிக்கும் எமோஜிக்களையும் சேர்த்துள்ளார்.
இது சமூக வலைதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. ரொனால்டோ தனக்கு எதிராகவே பேசிவருகிறார் என கிண்டல் செய்து வருகிறார்கள்.
ரொனால்டோ 5 முறையும் மெஸ்ஸி 8 முறையும் பேலந்தோர் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.