ஆயுள் காப்பீட்டின் கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரியாக சத் பால் பானு பொறுப்பேற்பு!
டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் சாதனை படைக்க காத்திருக்கும் தென்னாப்பிரிக்க வீரர்கள்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர்கள் பலரும் புதிய சாதனை படைக்க காத்திருக்கின்றனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி லார்ட் திடலில் வருகிற ஜூன் 11 ஆம் தேதி தொடங்குகிறது.
ஐசிசி சார்பில் நடத்தப்படும் தொடர்களில் தென்னாப்பிரிக்க அணி மீண்டும் ஒருமுறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதுவரை தென்னாப்பிரிக்க அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றதில்லை. அதனால், இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று முதல் முறையாக ஐசிசி சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் அந்த அணி உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர்களான அய்டன் மார்க்ரம், ககிசோ ரபாடா மற்றும் கேசவ் மகாராஜ் புதிய சாதனை படைக்க காத்திருக்கின்றனர்.
அய்டன் மார்க்ரம் முக்கியமான போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணிக்காக பெரிய அளவில் சிறப்பாக விளையாடியது கிடையாது. ஐசிசியின் 4 நாக் அவுட் போட்டிகளில் விளையாடியுள்ள மார்க்ரம் வெறும் 68 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 22.66 ஆகவும், அதிகபட்ச ஸ்கோர் 31 ஆகவும் உள்ளது. இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு உதவ வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது.
இதையும் படிக்க:நாளுக்கு நாள் தலைமைப் பண்பில் முன்னேற்றமடையும் பாட் கம்மின்ஸ்; முன்னாள் ஆஸி. வீரர் பாராட்டு!
டெஸ்ட் போட்டிகளில் 3,000 ரன்கள் எடுக்க அவருக்கு இன்னும் 143 ரன்களே தேவைப்படுகின்றன. இதுவரை 45 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மார்க்ரம் 35.71 சராசரியுடன் 2,857 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 7 சதங்கள் மற்றும் 13 அரைசதங்கள் அடங்கும்.
தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா டெஸ்ட் மற்றும் சர்வதேச போட்டிகளில் சாதனை படைக்க காத்திருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஆலன் டொனால்டின் சாதனையை முறியடிக்க இன்னும் சில விக்கெட்டுகளே அவருக்கு தேவைப்படுகிறது. அதேபோல சர்வதேசப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள வீரர்கள் வரிசையில் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஜாக் காலிஸ் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இந்த சாதனையை ரபாடா முறியடிக்க வாய்ப்பிருக்கிறது.
டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணிக்காக அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள ஐந்தாவது வீரராக ரபாடா உள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 327 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இன்னும் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினால், அவர் ஆலன் டொனால்டின் அதிக விக்கெட்டுகள் (330 விக்கெட்டுகள்) சாதனையை முறிடிப்பார். 439 விக்கெட்டுகளுடன் டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணிக்காக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரராக டேல் ஸ்டெயின் உள்ளார்.
சர்வதேசப் போட்டிகளில் ககிசோ ரபாடா 566 விக்கெட்டுகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறார். சர்வதேசப் போட்டிகளில் ஜாக் காலிஸ் 572 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இன்னும் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினால், ஜாக் காலிஸின் சாதனையை ரபாடா முறியடிப்பார். தென்னாப்பிரிக்க அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற பெருமை ஷான் பொல்லக்கிடம் உள்ளது. அவர் 414 போட்டிகளில் 823 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
இதையும் படிக்க: 3 மாதங்களாக பேட்டை தொடாத ஸ்டீவ் ஸ்மித்..! சுவாரசியமான விளக்கம்!
தென்னாப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளரான கேசவ் மகாராஜ் டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இன்னும் இரண்டு விக்கெட்டுகளே தேவைப்படுகின்றன. அதேபோல, சர்வதேசப் போட்டிகளில் 300 விக்கெட்டுகள் கைப்பற்றிய தென்னாப்பிரிக்க வீரர் என்ற சாதனையை படைக்க அவருக்கு இன்னும் 6 விக்கெட்டுகள் தேவைப்படுகின்றன. 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினால், தென்னாப்பிரிக்க அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் சுழற்பந்துவீச்சாளர் என்ற மகத்தான சாதனையை அவர் படைப்பார்.
இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கேசவ் மகாராஜ், 198 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சர்வதேசப் போட்டிகளில் அவர் 294 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.