பிரதமருடன் ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை!
ஆதாரம் இன்றி குற்றஞ்சாட்டுவதே வழக்கமா? அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம்
புது தில்லி: போதிய ஆதாரம் இன்றி குற்றஞ்சாட்டுவதே உங்கள் வழக்கமா? என்று அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமலாக்கத் துறையை உச்ச நீதிமன்றம் கடிந்துகொள்வது இது ஒன்றும் புதிதல்ல.. ஏற்கனவே, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் பிணை மனு மீது அமலாக்கத் துறையை உச்ச நீதிமன்றம் கடிந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது தனிநபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டில், இதுதான் உங்கள் முறையா? என்று அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
ரூ.2,000 கோடி சத்தீஸ்கர் மதுபான முறைகேடு வழக்கில் கைதானவர்களின் பிணை மனு மீதான விசாரணையின்போது, அண்மைக்காலமாக அமலாக்கத் துறைக்கு எதிராக புகார்கள் அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். யார் மீதும் போதிய ஆதாரங்கள் இல்லாமல் குற்றஞ்சாட்டுவீர்கள்.. இதுதான் உங்கள் முறையா? என்று உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் ஓகா வாய்மொழியாகக் கேள்வி எழுப்பியதாகத் தகவல்கள் வெளியாகின.
நீதிபதி அபய் ஓகா கூறுகையில், குற்றஞ்சாட்டப்பட்டவர் ரூ.40 கோடி ஈட்டியதாகக் கூறுகிறீர்கள். ஆனால், இந்த வழக்கிலும், வேறு எந்த நிறுவனத்திலும் இவருக்குத் தொடர்பிருந்ததற்கான ஆதாரங்களை உங்களால் காட்ட முடியவில்லை. இவர் அந்த நிறுவனத்தின் இயக்குநரா அல்லது அதிகப் பங்குகள் வைத்திருப்பவரா? அல்லது மேலாண் இயக்குநரா என்பதை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர், நாளை நீதிமன்றத்தில் விளக்கம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத் துறையால் குற்றஞ்சாட்டப்பட்டு, பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட தனிநபர்களின் மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த கருத்துகளை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.