RCB: இடம் மாறும் சின்னசாமி ஸ்டேடியம்?- ஆர்.சி.பி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த ம...
`இந்த அங்கிள்தான்’ - அரசு சேவை இல்லத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; காவலாளி சிக்கியது எப்படி?
சமூகநலத்துறை சார்பில் அரசு சேவை இல்லம் தாம்பரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு 128 மாணவிகள், 5 வயதுக்குட்பட்ட இரண்டு சிறுவர்கள் தங்கி கல்லூரிகள், பள்ளிகளில் படித்து வருகிறார்கள். இந்த சேவை இல்லத்துக்கு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்தார். அவர் இல்லத்தில் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அதிர்ச்சி சம்பவம்
கடந்த 8-ம் தேதி பள்ளிக்கு விடுமுறை என்பதால் மாணவி பள்ளிக்குச் செல்லவில்லை. இருப்பினும் காலையில் கண்விழித்த மாணவி, தன்னுடைய அறையிலிருந்து வெளியில் வந்திருக்கிறார். அப்போது, மர்ம நபர் ஒருவர், சிறுமியின் முகத்தை துணியால் மூடியிருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, யாரு என்று கேட்பதற்குள் அவரின் வாயைப் பொத்தியை மர்ம நபர், சிறுமியை தூக்கிக் கொண்டு ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு தூக்கிச் சென்றிருக்கிறார். அந்த நபரின் பிடியிலிருந்து மாணவி தப்பிக்க முடிந்தளவுக்கு போராடியிருக்கிறார்.
.jpeg)
அதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர், மாணவியை சரமாரியாகத் தாக்கியதோடு அவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்திருக்கிறார். இந்தச் சூழலில் அந்த மர்மநபரிடமிருந்து தப்பிக்க மாணவி முயன்ற போது அவரின் தவறி கீழே விழுந்திருக்கிறார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதிக்கு சிலர் வந்திருக்கிறார்கள். அதைப்பார்த்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
வலியால் துடித்த மாணவியை மீட்ட சக மாணவிகள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் அவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதைக் கண்டறிந்தனர். அதோடு மாணவிக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் நடந்திருப்பதையும் டாக்டர்கள் உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து மேல்சிகிச்சைக்காக மாணவி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவிக்கு நடந்த இந்தக் கொடூர சம்பவம் குறித்து அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைப் போல மருத்துவமனையிலிருந்து சிட்லபாக்கம் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், மாணவியிடம் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
காவலாளியே காரணம்
மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தது அதே சேவை மையத்தில் வேலை செய்யும் காவலாளி மேத்யூ என்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. அதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர். அதோடு மேத்யூவின் புகைப்படத்தை மாணவியிடம் காண்பித்து விசாரித்தபோது தன்னிடம் தவறாக நடக்க முயன்றது இவர்தான் என்பதை அவர் தெரிவித்தார்.
இதையடுத்து மேத்யூ மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரைக் கைது செய்தனர். மேத்யூ குறித்து விசாரித்தபோது இவர், கடந்த சில ஆண்டுகளாக இந்த சேவை இல்லத்தில் காவலாளியாக வேலை செய்து வருவதும், இவரின் தாய் இறந்ததையடுத்து கருணை அடிப்படையில் இந்த வேலை மேத்யூவுக்கு கிடைத்ததும் தெரியவந்தது.
மேத்யூவின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் மேத்யூ, இந்த படுபாதக செயலில் ஈடுபட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

மேத்யூவை கண்டுபிடித்தது எப்படி?
மேத்யூவை கண்டுபிடித்தது எப்படி? என போலீஸார் கூறுகையில், ``சம்பவம் நடந்த அரசு சேவை இல்லத்தின் காம்பவுண்ட் சுவர் மிகவும் உயரமானது. அதோடு சுவர் வழியாக யாரும் ஏறி உள்ளே குதித்து விடாமலிருக்க முள்வேலியும் அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் வெளிநபர்கள் இந்த கொடூரத்தில் ஈடுபட வாய்ப்பில்லை என்பதை முதலில் கண்டறிந்தோம். அடுத்து சேவை இல்லத்தில் எப்போதும் காவலாளிகள் பணியில் இருப்பார்கள். அவர்களைத் தாண்டி வெளிநபர்கள் உள்ளே செல்ல வாய்ப்பில்லை. அதனால் சம்பவம் நடந்தபோது பணியிலிருந்த காவலாளி மேத்யூவிடம் சந்தேகத்தின் பேரில் விசாரித்தோம். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார்.
ஒருகட்டத்தில் எங்களிடம் உண்மையை ஒப்புக் கொண்டார். அதோடு மேத்யூவின் புகைப்படத்தை சிகிச்சை பெற்று வரும் சிறுமியிடம் காண்பித்தபோது அவரும் இந்த அங்கிள்தான் தன்னிடம் தவறாக நடந்துக் கொள்ள முயற்சி செய்தார் என்பதை உறுதிப்படுத்தினார். இதையடுத்துதான் மேத்யூவை கைது செய்தோம். விழுப்புரம் மாணவியைப் போல வேறு யாரிடமாவது மேத்யூ தவறாக நடக்க முயன்றாரா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம். பாலியல் வழக்கு என்பதால் சேலையூர் அனைத்து மகளிர் போலீஸார் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால் சிறுமி குறித்த தகவல்கள், கைதானவரின் விவரங்கள் வெளியில் சொல்லக்கூடாது" என்றனர்.