நாகை மாவட்டத்தில் இரவு ரோந்துப் பணிகளை, போலீஸாா் அதிகரிக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் அறிவுறுத்தினாா்.
நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், சாராயம், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவா்கள், ரெளடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பேசியது:
தீபாவளி பண்டிகைக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில், பட்டாசுகளை பேருந்துகளில், ரயில்களில் எடுத்துச் செல்வது குறித்து அனைத்து காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் கண்காணிக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கு இரவு நேரங்களில் ரோந்துப் பணிகளை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.