RCB: இடம் மாறும் சின்னசாமி ஸ்டேடியம்?- ஆர்.சி.பி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த ம...
எங்களுக்கு பயமில்லை; அமித் ஷாவும் மோடியும் சாதாரணமான ஆள்கள்: ஆ. இராசா பேட்டி
மதுரையில் அமித் ஷாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. இராசா, தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான விவாதத்திற்கு அமித் ஷா தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ஆ. இராசா,
"மத்திய உள்துறை அமைச்சர் என்பதை மறந்து அமித் ஷா பேசியிருக்கிறார். அவரது பேச்சு அப்பட்டமான பொய் அருவருப்பான வஞ்சகம், பிளவுநோக்கம் கொண்ட சூதுரை. அவருடைய பொறுப்பு, கடமை பற்றி கவலைப்படாமல் அவதூறுகளை அள்ளிவீசுவதும் மாநிலத்தில் மாற்றுக்கட்சி ஆட்சி இருந்தால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளிவீசுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்னையைத் தூண்டும் வகையிலும் இருக்கிறது, இது கூட்டாட்சி தத்துவத்திற்கு நல்லதல்ல.
திமுகவைப் பார்த்து ஷாக் அடித்துதான் பாஜகவினர் இங்கு வருகிறார்கள். அவர்களின் பிளவுவாதமும் மத அரசியலும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. தமிழக மக்கள் முதல்வரின் பின்னால் இருக்கிறார்கள். இதனை ஜீரணிக்க முடியாமல்தான் பாஜகவினர் இங்கு வந்து பேசுகிறார்கள்.
இதையும் படிக்க | 2026 பேரவைத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி அமையும்: அமித் ஷா
மோடியும், அமித் ஷாவும் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வர வேண்டும். அப்போதுதான் திமுகவிற்கான வாக்குகளும் அதிகரிக்கும். கடந்த மக்களவைத் தேர்தலில் எத்தனை முறை மோடி இங்கு வந்தாரோ நீலகிரி தொகுதியில் அவ்வளவுக்கு வாக்குகள் அதிகரித்தது. பாஜகவை பார்த்து எங்களுக்கு பயமில்லை, அவர்களைப் பார்க்கும்போது சிரிப்பாகத்தான் வருகிறது.
மக்களவை தேர்தலின்போது பிரதமர் மோடி 5 முறை வந்தார். சுதந்திர இந்தியாவில் இதுபோன்று பிரதமர் 5 முறை ஒரு மாநிலத்திற்கு வந்த வரலாறு உள்ளதா?
அமித் ஷாவையும் மோடியையும் பார்த்து நாங்கள் பயப்படவில்லை, அவர்கள் சாதாரணமான ஆள்கள். அவர்களுக்கு பின்னால் உள்ள ஒரு சித்தாந்தம் எல்லா இடங்களிலும் படையெடுத்து ஜெயிக்கிறது. ஆனால் இங்கு ஏன் ஜெயிக்க முடியவில்லை? ஏனென்றால் எங்களிடம் இங்கு மாற்று சித்தாந்தம் உள்ளது.
திராவிட இயக்க சித்தாந்தம் இருக்கும்வரை அவர்களால் இங்கு காலூன்ற முடியாது. நாங்கள் தில்லி அல்ல, நாங்கள் ஹரியாணாவோ மகாராஷ்டிரமோ அல்ல, நாங்கள் தமிழ்நாடு, நாங்கள் திராவிடம், அவர்கள் இங்கு வர முடியாது.
தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருப்பதை அமித் ஷா விரும்பவில்லை. இந்து மத ஒற்றுமைக்காக அவர்கள் முருகர் மாநாடு நடத்தவில்லை, மதவாதத்தை தூண்டிவிடும் வகையில் மாநாடு நடத்த முயற்சிக்கின்றனர்.
தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான விவாதத்திற்கு அமித் ஷா தயாரா? தில்லியிலா? சென்னையிலா? புவனேஸ்வரத்திலா? எங்கு வேண்டுமானாலும் நான் வருகிறேன். ஆனால், ஹிந்தியில் மட்டும் பேசாதீர்கள்.
இல்லாத சரஸ்வதி நாகரிகத்திற்கும் பேசாத சமஸ்கிருத மொழிக்கும் மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. ஆனால், எங்கள் கீழடிக்கு எங்கள் நாகரிகத்திற்கு எங்கள் இரும்பு பயன்பாட்டிற்கு அங்கீகாரம் கொடுக்க மறுக்கிறார்கள்" என்று பேசினார்.
இதையும் படிக்க | 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வந்தே தீரும்: ராமதாஸ்