காயமடைந்தவரை நம்.4இல் விளையாட வைத்தவருக்கு சாம்பியன்ஸ் டிராபியை தரலாம்!
முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் பாகிஸ்தான் பேட்டர் ஃபகார் ஸமான் காயத்துடன் விளையாடியதை விமர்சித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் நேற்று (பிப்.19) மோதின. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
முதல் இன்னிங்ஸில் முதல் ஓவரில் 2ஆவது பந்தில் எல்லைக் கோட்டருகே பந்தினை தடுக்கும்போது ஃபகார் ஸமானுக்கு காயம் ஏற்பட்டது.
அதனால் அவர் தொடக்க வீரராக களமிறங்கவில்லை. பின்னர் நம்.4இல் களமிறங்கி தடுமாற்றத்துடனே விளையாடினார்.
41 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த ஃபகார் ஸமான் பிரேஸ்வெல் ஓவரில் போல்ட் ஆனார்.
ஸமானை நம்.4இல் விளையாட வைத்தவருக்கு சாம்பியன்ஸ் டிராபியை தரலாம்
இது குறித்து முன்னாள் வீரரும் கேப்டனுமான முகமது ஹபீஸ் கூறியதாவது:
ஃபகார் ஸமானை நம்.4இல் களமிறக்கியவர்களுக்கு சாம்பியன்ஸ் டிராபியை பரிசளிக்கலாம். இது நீண்டதொரு போட்டி. அவர் வலியுடன் இருக்கிறார். அவரிடம் களத்தில் நின்று எல்லாவற்றையும் எல்லைக் கோட்டைத் தாண்டி அடிக்கச் சொல்லுவது அநியாயம். அப்படி எதிர்பார்க்கவும் முடியாது.
ரன்னிங் ஓடும்போது அவர் தடுமாறியதைப் பார்த்தோம். அது பாபர் அசாமை கூடுதல் அழுத்ததுக்கு உள்ளாக்கியது என்றார்.