Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
சபரிமலையில் விமான நிலையம்: திங்கள்கிழமை சர்வே பணிகள் ஆரம்பம்!
திருவனந்தபுரம்: சபரிமலையில் விமான நிலையம் கட்டமைக்கும் பணியில் முதல்கட்டமாக சர்வே பணிகள் திங்கள்கிழமை(ஜூன் 9) தொடங்குகின்றன. இதற்காக ஆய்வுக் குழுவினர் விமான நிலையம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்துக்கு திங்கள்கிழமை வருகை தரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலைக்கான விமான நிலையம் அமைக்க சரியான தேர்வாக ‘செருவள்ளி எஸ்டேட்’ இருக்குமென்று ஆய்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அந்த எஸ்டேட்டின் உரிமையாளரான அயானா தொண்டு நிறுவனத்தாரால் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சபரிமலைக்கான விமான நிலையம் அமைக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரியொருவர் தலைமையிலான ஆய்வுக் குழுவினரால் பல பகுதிகள் பரிசீலிக்கப்பட்டு அதன்பின் இறுதியாக, விமான நிலையம் அமைக்க உகந்த இடமாக செருவள்ளி எஸ்டேட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து தங்களிடம் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை என பல குற்றச்சாட்டுகளை எஸ்டேட் தரப்பு சுமத்தியது.
இதனிடையே, அந்த பகுதியில் சர்வே நடத்த தடையாக இருந்த சட்ட ரீதியிலான சிக்கல்களுக்கு இப்போது தீர்வு எட்டப்பட்டுவிட்டதால் முதல்கட்ட கள ஆய்வுப் பணிகளை ஆரம்பிக்க அரசு முனைப்பு காட்டுகிறது. இந்தநிலையில், இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஜூலை 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.