சிறிய அறைக்கு மாத வாடகை ரூ. 25,000! வைரலாகும் இளைஞரின் விடியோ!
பெங்களூருவில் மிகச்சிறிய அறைக்கு மாத வாடகையாக ரூ. 25 ஆயிரமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
சொந்த ஊரை விட்டு பெங்களூருவுக்கு வேலைக்குச் சென்ற இளைஞர், தான் வாடகைக்கு எடுத்த அறை குறித்து வெளியிட்ட விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
நகர்ப்புறங்களில் வீடுகளுக்கு ஏற்படும் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்திக்கொண்டே செல்கிறது. கிராமப்புறங்களில் இருந்து வேலைவாய்ப்புக்காகவும் அதிக ஊதியத்துக்காகவும் நகர்ப்புறங்களில் உள்ள நிறுவனங்களை, வாய்ப்புகளை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
நாளுக்குநாள் அதிகரிக்கும் நகர்ப்புற மக்கள் தொகையானது நகர்ப்புற திட்டமிடலின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
சென்னை உள்பட பெங்களூரு, மும்பை, புணே, தில்லி ஆகிய நகரங்களில் வீடுகளுக்கான தேவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
கல்வி நிறுவனங்கள், வேலைவாய்ப்புகள் என கிராமங்களில் இருந்து நகர்ப்புறங்களை நோக்கி நகரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பதையே இவை காட்டுகின்றன.
அவ்வாறு அறைகள் எடுத்து தங்குபவர்கள் சந்திக்கும் சவால்கள் சொல்லில் அடங்காதவை.
பெங்களூருவில் வேலைக்காகச் சென்ற இளைஞர் ஒருவர், தான் வாடகைக்கு எடுத்துள்ள அறை குறித்து விளக்குவதன் மூலம் அங்கு வாழ்க்கை முறையின் அவலத்தை, உண்மையை உணர முடியும்.
அந்த விடியோவில் இளைஞர் ஒருவர் அறையின் நடுவில் நின்று தனது இரு கைகளையும் விரிக்கிறார். இரு கைகளும் இருபுற சுவர்களைத் தொடுகின்றன. அந்த அளவுக்கு குறுகிய அகலம் உடையதாக அந்த அறை உள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறார்.
பின்னர் தனது ஒரு காலை பின்பக்க சுவரை நோக்கித் தூக்கி தனது கையை முன்பக்க கதவை நோக்கி உயர்த்துகிறார். அந்த அளவே அறையின் நீளம் உள்ளது. இந்த அறைக்கு அவர் கொடுக்கும் வாடகைதான் வியப்பை ஏற்படுத்துகிறது. பராமரிப்பு செலவின்றி மாதத்துக்கு ரூ. 25,000 வாடகையாக வசூலிக்கப்படுகிறது.
இந்த அறையில் ஒரே ஒரு நன்மை உள்ளது. அது என்னவென்றால், அறையில் வைக்க பொருள்களை வாங்கிக் குவித்து பணத்தை வீணாக்குவது தடுக்கப்படும். அந்தவகையில் இந்த அறையில் இருந்து பணத்தை சேமிக்கலாம் என்று சோகம் கலந்த புன்னகையோடு கூறுகிறார் அந்த இளைஞர்.
இளைஞர் பதிவிட்டுள்ள இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. இதில் சிலர் மும்பையிலும் இதே நிலைதான் எனக் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.
மும்பையிலும் இதே நெருக்கடி உள்ளது. சில நாள்களில் புணேவும் இந்த நிலைக்கு மாறிவிடும். மக்கள்தொகை அதிகரித்துக்கொண்டே சென்றால் எல்லா நகரங்களும் ஒரே மாதிரியானதாக ஆகிவிடும் என பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | நொய்டாவில் ரூ.30 கோடிக்கு வீடு வாங்கிய அர்னாப் கோஸ்வாமி!