சிவகாசி: `பட்டாசுத் தொழிலாளர் உழைப்பை போற்றும் நினைவுச்சின்னம் திறப்பு' - தொழிலாளர்கள் மகிழ்ச்சி
’பட்டாசு’ என்றாலே நினைவுக்கு வருவது சிவகாசிதான். ஒட்டு மொத்த இந்தியாவையும் ஒளிமயமாக்கும் ‘குட்டி ஜப்பான்’ என்ற அடைமொழியுடன் சிவகாசி அழைக்கப்படுகிறது.
1920-களில் சிவகாசி பகுதியில் நிலவிய வறட்சி காரணமாக மாற்றுத் தொழிலை உருவாக்கிட சிவகாசியைச் சேர்ந்த அய்யநாடார், சண்முக நாடார் இருவரும் மேற்கு வங்க மாநிலத்திற்குச் சென்று தீப்பெட்டித் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு 1923-ம் ஆண்டு சிவகாசியில் தீப்பெட்டித் தொழிற்சாலையைத் தொடங்கினர்.

தீப்பெட்டித் தொழிலின் நீட்சியாக பட்டாசு உற்பத்தித் தொழில் தொடங்கப்பட்டது. சிவகாசி மற்றும் சாத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 1923-ம் ஆண்டு முதல் மத்தாப்பூ, ஓலைவெடி, சரவெடி உள்ளிட்ட சிறிய ரக பட்டாசுகளே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது 300-க்கும் மேற்பட்ட பட்டாசு வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
சிறிய மற்றும் பெரிய அளவில் 1,080 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்தியாவில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்ற பட்டாசு ஆலைகளில் 90 சதவிகிதத்திற்கும் மேல் சிவகாசியில்தான் உள்ளன.
இப்பட்டாசுத் தொழிலின் வாயிலாக நேரடியாகவும், மறைமுகமாகவும் 8 லட்சம் மக்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஆண்களைவிட பெண் தொழிலாளர்களே அதிக எண்ணிக்கையில் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டின் மொத்த பட்டாசு தேவையில் 90 சதவிகிதத்திற்கும் மேல் உற்பத்தி செய்யப்படும் சிவகாசியில் பட்டாசு வர்த்தகம் ஆண்டுக்கு ரூ.6,000 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. தற்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பசுமை பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. ”டான் பாமா” எனப்படும் தமிழ்நாடு பட்டாசு-கேப் வெடி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் சிவகாசி பட்டாசுகளுக்கு புவிசார் குறியீடு வழங்கக் கோரி சமீபத்தில் விண்ணப்பமும் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் மக்களின் மகிழ்ச்சிக்காக ஆண்டு முழுவதும் உழைக்கும் பட்டாசுத் தொழிலாளர்களை கவுரவிக்கும் வகையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் ஆலோசனையின் பேரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சிவகாசி மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து நினைவுச்சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
சிவகாசி காரனேசன் சந்திப்பில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. இச்சின்னம், உழைக்கும் பட்டாசுத் தொழிலாளியின் கையில் மகிழ்ச்சியுடன் மத்தாப்பு வெடித்து கொண்டாடும் சிறுவன் உருவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சின்னத்தை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மாவட்ட் ஆட்சியர் முனைவர். ஜெயசீலன் ஆகியோர் பொது மக்களின் பார்வைக்காக திறந்து வைத்தனர்.
இச்சின்னத்தில், “கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக் கருவியெலாம் செய்துதந்த கை தான் யார் கை?” என்ற பாவேந்தர் பாரதிதாசனின் வரிகள் பொறிக்கப்பட்டுள்ளது. இச்சின்னம் பட்டாசு தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் கவுரவத்தையும் ஏற்படுத்தியுள்ளது.