சூரிய சக்தியில் இயங்கும் இருசக்கர வாகனங்களை வழங்கிய ராகுல்!
உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் சூரிய சக்தியில் இயங்கும் இருசக்கர வாகனங்களை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வழங்கினார்.
இரண்டு நாள் பயணமாக தனது மக்களவைத் தொகுதியான ரேபரேலிக்கு வருகை தந்துள்ள காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று காலை லக்னௌ விமான நிலையத்தில் தரையிறங்கினார். அவரை மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராம், அமேதி எம்பி கிஷோரி லால் சர்மா மற்றும் பிற தலைவர்கள் பிரம்மாண்டமான வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் சாலை வழியாக ரேபரேலிக்குச் சென்றார்.
ரேபரேலியில், விசாகா இண்டஸ்ட்ரீஸில் 2 மெகாவாட் சூரிய சக்தி ஆலையையும், மின்சார சார்ஜிங் நிலையத்தையும் அவர் திறந்து வைத்தார். மேலும் அந்த நிகழ்வில் அரசு சாரா நிறுவனம் ஏழைகளுக்கு நன்கொடையாக வழங்கிய 12-க்கும் மேற்பட்ட சூரிய சக்தியில் இயங்கும் இருசக்கர வாகனங்களையும் அவர் வழங்கினார்.
மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் முதல்முறையாக உத்தரப் பிரதேசத்தின், அமேதி தொகுதிக்கு ராகுல் காந்தி ஏப்ரல் 30(நாளை) செல்லவுள்ளார். அமேதி தொகுதியில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் இதயப் பிரிவைத் திறந்து வைக்கவுள்ளார். மேலும், அதே நாளில் இந்திரா காந்தி நர்சிங் கல்லூரியையும் அவர் ஆய்வு செய்யவுள்ளார்.
சஞ்சய் காந்தி மருத்துவமனையானது, புதுதில்லியில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு அறக்கட்டளையால் இயக்கப்படுகிறது. இந்த அறக்கட்டளையின் தலைவராக சோனியா காந்தியும், அறங்காவலராக ராகுல் காந்தியும் செயல்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.