ரீல்ஸ் எடுத்த பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞர்; பதிலுக்கு பெண் செய்த வேலை.. - வைரல்...
பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பாக சட்டமன்றத்தில் மசோதா; காவல்துறைக்கு புதிய அறிவிப்புகள்!
தமிழக அரசின் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காத வழக்கில், ஏப்ரல் 8-ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு அதிரடி தீர்ப்பை அளித்தது.
அந்தத் தீர்ப்பில், ஆளுநரின் செயல்பாடுகளைக் கண்டித்து, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கால வரம்பு நிர்ணயித்த உச்ச நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 142 தனக்கு அளித்திருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதலும் அளித்தது.

இந்த நிலையில், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்துக்குத் துணை வேந்தர் நியமனம், நீக்கம் அதிகாரத்தை அரசுக்கு அளிக்கும் மசோதா இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. `2025-ம் ஆண்டு, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக திருத்தச் சட்டம்' என்ற மசோதாவைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். தொடர்ந்து, அது நிறைவேற்றப்பட்டது.
மேலும், சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை விவாதத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறை குறித்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், "சட்டம் ஒழுங்கு சீராகவும் தமிழ்நாடு அமைதி மிகு மாநிலமாக இருப்பதனால்தான் பெரிய அளவிலான சாதி சண்டை, மதக் கலவரங்கள், வன்முறைகள் இங்கு இல்லை. இதெல்லாம் நடந்தால்தான் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று புழுதி வாரித் தூற்ற முடியும். ஏதாவது ஒரு சில இடத்தில் கவனக் குறைவாக சில தவறுகள் நடந்திருந்தால் கூட உடனடியாக அதைத் திருத்திக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

உள்நோக்கத்தோடு, அரசியல் ஆதாயத்திற்காகத் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பேசுகிறவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன், இது மணிப்பூர் அல்ல, காஷ்மீர் அல்ல. உத்தரப்பிரதேச கும்பமேளா மரணங்கள் இங்கு நடக்கவில்லை, இது தமிழ்நாடு. அதை மறந்து விடாதீர்கள்.
குற்றங்களைக் குறைக்கின்ற துறையாக மட்டும் இல்லாமல் குற்றங்களைத் தடுக்கின்ற துறையாக காவல்துறை செயல்பட வேண்டும். அதற்கு காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டால் மட்டும் போதாது ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.
சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பு. எனவே, அனைவரும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். சுய ஒழுக்கத்தோடு எல்லோரும் இருக்க வேண்டும். காவல்துறையினரும் பொதுமக்களிடத்தில் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்." என்று கூறி, காவல்துறைக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
காவல்துறைக்கான அறிவிப்புகள்:
* காவலர்களுக்கு என தனி நாளை கொண்டாடுவதற்காக, செப்டம்பர் 6-ம் நாள் இனி ஆண்டுதோறும் காவலர்கள் நாளாகக் கொண்டாடப்படும்.
* காவல்துறையின் செய்தி மற்றும் ஊடகத்துறையை நிர்வகிக்கும் பொருட்டு புதிதாக ஒரு காவல் கண்காணிப்பாளர் பதவி உருவாக்கப்படும்.
* சென்னை ஆவடி மற்றும் தாம்பரம் மாநகரங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்ட, மாநகரங்களிலும் பிரத்யேக சமூக ஊடக மையங்கள் உருவாக்கப்படும்.

* சென்னை ஆயுதப்படையில் புதிய பணியிடங்களும், 250 காவல் ஆய்வாளர்கள் பணியிடங்களும் உருவாக்கப்படும்.
* உதகை மற்றும் தருமபுரியில் ரூ.101 கோடியில் ஆயுதப்படை காவல் குடியிருப்புகள் கட்டப்படும்.
* காவல்துறைக்கு 350 நான்கு சக்கர வாகனங்களும் 50 நடமாடும் தடயவியல் வாகனமும் வழங்கப்படும்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
